Saturday, December 21, 2019

பிச்சை

நான் பிச்சையெடுப்பதை அவ்வளவாக ஆதரிப்பதில்லை. எப்போதேனும் வயதானவர்கள் பிச்சை எடுக்கும்போது குறைந்தது ஐந்து அதிகபட்சம் பத்து ரூபாய் போடுவது உண்டு. பத்து ரூபாய் போடும்போது சற்று பெருமையாய் உணர்வதுண்டு. எல்லாம் நேற்று வரைதான் அந்த பெருமையும்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக என் வீட்டருகே ஒரு பெண்மணியைப் பார்ப்பதுண்டு. அவர் ஒரு ரஷ்ய பெயிண்டிங்கில் வரும் பெண்மணியப் போலிருப்பார். சற்றேற அறுபது வயதிலிருப்பார். பாந்தமாக உடையணி ந்திருப்பார்.காலை, இரவு என எந்நேரமும் தெருவிலிருக்கும் ஒரு டீக்கடை வாசலில் உட்கார்ந்திருப்பார். ஆனால், ஒரு போதும் அவர் பிச்சை எடுத்துப்பார்த்ததில்லை. அவரின் அதிகப்பட்ச உணவே டீ தான், நான் பார்த்தவரை.

வழக்கமான பூக்கடையில், நேற்று பூ வாங்கிக் கொண்டிருந்தபோது, அந்தப் பெண்மணி வந்தார், நின்றார். எதுவும் .கேட்கவில்லை. அந்த பூக்காரப்பெண் உடனே இருபது ரூபாய் நோட்டையெடுத்து நீட்டினார். வாங்கிகொண்டுப் போய்விட்டார். நான் ஆச்சரியம் தாங்காமல் கேட்டே விட்டேன். " யாரது? வந்து நின்னாங்க, காச நீட்டவும் வாங்கிட்டுப் போயிட்டாங்க, எங்க வீட்டாண்டப் பார்த்திருக்கேன்..! " என்றேன்.

" அந்தம்மா ஒரு டீச்சர்  (அண்)ணா .. ஒன்னுக்கு, ரெண்டு பசங்கண்ணா.. அந்தம்மா வீட்டுக்காரர் போயிட்டார். அப்பால, ரெண்டு பசங்களும் பொண்டாட்டி பேச்சுக் கேட்டுனு நீ அவன்ட போன்னு இவன் சொல்ல, அவன் இவன்ட போன்னு சொல்ல அந்தம்மா ரோஷம் வந்து வெளிய வந்துடுச்சு..யார் வீட்டுக்கும் போகாம தெருவிலேயே இர்ந்துடுச்சு. யார்ட்டயும் காசுன்னு கேக்காது ணா ..இந்த ஏரியால நிறையப்பேத்துக்கு தெரியும். ரொம்ப தெரிஞ்சவங்க, பிடிச்சவங்க ட்ட மட்டும் போய் நிக்கும். நாம உடனே காசு கொடுத்த வாங்கினு போயிரும் ..கொஞ்சம் லேட்டா னாலும் போயிரும்..அவ்வளவு சங்கடம்னா..அதான் அந்தம்மா வந்தாக்க உடனே காச கொடுத்துறுவேன். ..நானே எத்தினி வாட்டி அதுக்கு குட் மார்னிங் சொல்லிருப்பேன் ணா, இந்தாண்ட அது ஸ்கூல் போறச்ச ..எப்பவாச்சும் சேலத்துணி வாங்கி கொடுப்பேன். ஏதோ நம்மால முடிஞ்சதுண்ணா .." கண்களில் நீர் தேங்கியிருந்தது. என் பத்து ரூபாய் பெருமையை நினைத்து வெட்கப்பட்டேன்.


"ஆமா, அவங்க மகன்க எங்க இருக்காங்க இப்ப.." எனக் கேட்டேன்.

"இங்கேதா ணா  இருக்காங்க ..இப்பவும், டெய்லி அந்த வீட்டை ஒரு தபாவது சுத்தி வரும் இந்தாம்மா. ஆரம்பத்துல மகன்களும் கூப்பிட்டு பார்த்தானுக..அவங்களுக்கு அசிங்கமா இருக்குன்னுட்டு . இந்தாம்மா பேசவே இல்ல ..அவங்க கண்ணு முன்னாடியே அந்தம்மா தெருவிலேயேதான்  இருக்கு.. அந்த மகன்களுக்கு, இத விட என்ன தண்டனை ணா வேணும்..? "