Friday, October 15, 2021

முருகேசு இல்ல முருகேஷ்..!

கொ.மு 2019. அதாவது, கொரானாவுக்கு முந்தைய கால கட்டம். நான் பேருந்தில் அலுவலகம் பயணிக்கையில், புதிதாக ஒரு பெரியவர் தென்பட ஆரம்பித்தார். வழக்கமாய் நான் அமரும் இருக்கையில் காண நேர்ந்தது. அதிகாலை பயணம் என்பதால், சொற்ப பயணிகளே இருப்பர். அதனால், அனைவருமே பரிச்சயம்.

இரண்டாவது நாளே, குட் மார்னிங்க் பிரதர் என்றார். அவருக்கு எப்படியும் வயது, 70க்கு மேலிருக்கும். முன் வழுக்கை, பொக்கை வாய், ஒரு பல் துருத்திக்கொண்டிருந்தது. குள்ளமான, மெலிந்த தேகம். முகம் சவரம் செய்யப்பட்டு, பென்சில் மீசை வைத்திருந்தார். மடியில், பைபிள் திறந்திருந்தது. நானும், குட் மார்னிங்க் சார் என்றேன். "சாரெல்லாம் வேணாம்..பிரதர்ன்னே சொல்லுங்க.." என்று சிரித்தார். எனக்கு சிரிப்பாய் வந்தது. அப்போதே நினைத்துக்கொண்டேன், இன்றைக்கு இதை என் மனைவியிடம் பகிரும்போது என்ன கலாய் கலாய்க்கப்போகிறாள் என்று. தினமும், இரவு உணவின்போது நானும், என் பையனும் எங்கள் தினசரி அனுபவங்களை வீட்டில் பகிர்ந்துகொள்வதுண்டு.

அவர், ஏதோ ஒரு பைபிள் வசனத்தை சொல்லி நாட்டு நடப்பை ஒப்பிட்டார். நான் அவ்வளவாய் கவனிக்காது போலிருந்தேன். எனக்கு முன்னே இறங்கிக்கொண்டார். இறங்குகையில், 'வர்றேன் பிரதர்.." என்றார். ஒரு டீ சர்ட், ஜீன்ஸ் அணிந்திருந்தார். மிகப்பழையதாயிருந்தது. அவர் பாதத்தை விட பெரிய அளவிலான செருப்பணிந்திருந்தார். அதனால், நடை சற்று மாறுதலாயிருந்தது. தோளில், ஒரு பக்கமாய் சாயம் ஏறிப்போன லேப்டாப் பை அணிந்திருந்தார். அன்றிரவு, நினைத்தது போலவே நடந்தது. என் மனைவியும், பையனும் விழுந்து, விழுந்து சிரித்தார்கள். "யார் இதில அண்ணே..யாரு தம்பி.." என்று கேட்க என் பையனுக்கு புரையேறிப்போனது.


அடுத்த நாளும், அதே போல் பைபிள் படித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். நான் ஏறியவுடன், குட் மார்னிங்க் பிரதர் என்று சிரித்தபடி பைபிளை மூடி பையினுள் வைத்தார். பையினுள், பைபிளும், ஒரு டிபன் பாக்ஸ் மட்டுமே இருந்ததை கவனித்தேன். என்னைப்பற்றி விசாரித்தார். நான் கேட்காமலேயே அவரைப்பற்றி சொன்னார். அவருக்கு மூன்று பையன்கள், எல்லோருக்கும் திருமணமாகி விட்டது. இரண்டு பேரன்கள் வேறு என்றார். அன்றைக்கு அவர் இறங்கி செல்கையில் பஸ் பாசை இருக்கையிலேயே விட்டுவிட்டுப்போய் விட்டார். நானும் கவனிக்கவில்லை அடுத்த நிறுத்தம் வரும் வரை. வேறொருவர் உட்காருகையில் கவனித்து, என்னிடம் கேட்க நான் வாங்கிப்பார்த்தேன். பஸ்பாஸ் அடையாள அட்டையில் புகைப்படத்தில் நம் பிரதர்! பெயரை கவனித்தேன். 'முருகேசு' என்று வயது 72, அல்சூர், பெங்களூர் என விலாசம் எழுதப்பட்டிருந்தது. அடடா..பஸ் பாஸ் இல்லாமல், என்ன சிரமப்படுகிறாரோ என வருத்தமாயிருந்தது. 

அன்றிரவு, அவர் புகைப்படத்தைப்பார்த்து விட்டு இன்னும் சிரிக்க ஆரம்பித்தாள் என் மனைவி. அவள்தான் கவனித்தாள், பாசின் பின்புறம் மொபைல் நம்பர் எழுதப்பட்டிருந்தது. நல்ல வேளை, என எண்ணிக்கொண்டே டயல் செய்தேன். 'முருகேஷ் ஸ்பீக்கிங்க்' என்றார் ஸ்டைலாக. எனக்கு சிரிப்பாய் வந்தது. விபரம் சொன்னவுடன், "கடவுள் இருக்காருப்பா..ஆயிர ரூபா இந்த மாசம் அவுட்டானு நினைச்சேன்.." என்றார். நான், "சார்..முருகேசுன்னு போட்டிருக்கு..தமிழ்தானா நீங்க.." என்றேன். "டூ மிஸ்டேக்ஸ்..ஒண்ணு..முருகேசு இல்ல..முருகேஷ்" என கேஷ்-ஐ அழுத்தினார். "இன்னொண்ணு..சார் வேணாம்..பிரதர்னு சொன்னா போதும்..மரியாதையெல்லாம் வேணாம்" என்று சத்தமாக சிரித்தார். "சாப்பாடு ஆச்சா.." என்றவரிடம், "ஆச்சு..சார்..பிரதர்..உங்களது.." என்றேன் சிரித்தபடி. "ஆங்க்..ஆச்சு..என்ன சாப்பாடு தெரியுமா..வொயிட் ரைஸ்...பிக்கிள்..காவிரி வாட்டர்..பிரமாதம்..இன்னிக்கு சாப்பாடு" என சிலாகித்தார். எனக்கு அப்போதுதான் அவர் வறுமை புரிந்தது. 


மறுநாள், என் நிறுத்ததில் ஏறும்போது அவர் இருக்கையில் பைபிள் படிக்காமல் பதட்டமாய் இருந்தார். பையிலிருந்து பாசை எடுப்பதற்குள் "ஜல்திப்பா.." என வாங்கி கண்டக்டரிடம் காண்பித்தார். "அஞ்சு ரூபா டிக்கட் வாங்க வச்சுட்டான்பா..பாஸ் வந்துரும்..காட்டிறேன்னு..சொல்றேன்..ஸ்டேஜ் கணக்கு டிக்கெட் எடு..இல்லன்னா இறங்குன்ங்கிறான்..இதில மிரட்டாறான்..இந்த ஸ்டாப்பில் காட்டிலனா, திரும்ப டிக்கெட் வாங்குனுங்கிறான்..!" என்று சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டார். அவர் வேலையைப்பற்றிக்கேட்டேன். ஏதோ பர்னிச்சர் கொடொனில் பணிபுரிவதாக கூறினார். காலையில் சாப்பிடமாட்டாராம். 'டயட்' என்று சிரித்தார். மதியம் ஒரு வேளை டிபன் பாக்ஸ் சாப்பாடு, கொடொனில் இரு வேளை டீ கொடுப்பார்களாம். இரவு வீடு போய் சாப்பாடு அவ்வளவுதான். 

என்ன வேலை என ஒரு முறை கேட்டதற்கு, " என்னைத்தாண்டி எதுவும் உள்ளே வராது..வெளியெயும் போகாதுப்பா.." என செக்யூரிட்டி என்பதை நகைச்சுவையாய்க்குறிப்பிட்டார். 

தினசரி ஒரு பைபிள் வசனம், நாட்டு நடப்பு பற்றி பேசுவார். நகைச்சுவைக்கு பஞ்சமிருக்காது. அவரும் ஏதாவது சொல்லிவிட்டு சிரிப்பாய் சிரிப்பார். தினமும் முந்தைய இரவு சாப்பாட்டைப்பற்றி கேட்பார். அவரும் சொல்லுவார். பெரும்பாலும், தினமும் ஒரே சாப்பாட்டைத்தான் வர்ணித்து சொல்லுவார். கேட்பதற்கே பாவமாய் இருக்கும். 

சரியாய் லாக்டவுன் தொடங்குமுன், ஒரு நாள் என்னிடம் " ஒரு முன்னூறு ரூபா கிடைக்குமா பிரதர்..வீட்டம்மாக்கு முடியல.." என்றார். அன்றைக்கு என் பர்சிலும் பணம் இல்லை. சொன்னால் தப்பாய் எடுத்துக்கொள்வாரோ என எண்ணி, அவர் நிறுத்ததிலேயே இறங்கி ஏடிஎம் அழைத்து சென்றேன். 500 ரூபாய் தாள்தான் ஏடிஎமில் வந்தது. பரவாயில்லை, வைத்துக்கொள்ளுங்கள் என்றேன். "ஓகே பிரதர்..ஜஸ்ட் டூ டேஸ்..ரிடர்ன் பண்ணிடுறேன்.." என்றார்.


அடுத்த நாள் முதல் பேருந்தில் தட்டுப்படவில்லை. சரி, வேற டைமில் போகிறார் போல நினைத்துக்கொண்டேன். எனக்கு அவர் மனைவியின் உடல் நிலை குறித்து கவலையாயிருந்தது. போன் பண்ணலாம் என நினைத்தால், எங்கே பணம் கேட்க போன் பண்ணுவதாய் தப்பாய் எடுத்துக்கொள்வாரோ என நினைத்துக்கொண்டேன். மூன்று நாட்களாக காணோம். என் மனைவியிடம் பணம் கொடுத்ததை சொல்லாமல், " நம்ம முருகேஷ் பிரதர..காணோம்..மூணு நாளா.." என்றேன். உடம்பு முடியாம இருக்கும்..விடுங்க..என சாதரணமாய் சொன்னாள். சனி, ஞாயிறும் போய் திங்கள் கிழமையும் வரவில்லை. போன் செய்து பார்த்தேன். ஸ்விட்ச் ஆப் என வந்தது. என்னவாயிற்று என கவலையாயிருந்தது. அப்போதுதான், கொரானொ ஆரம்பித்திருந்தது.

அடுத்த நாளும் பேருந்தில் அவர் வரவில்லை. அவர் வழக்கமாய் இறங்கும் நிறுத்ததில் சட்டென ஏதோ தோன்ற இறங்கிவிட்டேன். அவர் சொன்ன அடையாளத்தை வைத்து அந்த பர்னிச்சர் கொடோனை கண்டுகொண்டேன். அங்கிருந்த செக்யூரிட்டி என்னைப்பார்த்ததும், "லீவு சார்..திறக்கமாட்டாங்க.." என்றார். "இல்லீங்க..இங்க முருகேசுன்னு ஒருத்தர்.." என்றதும் அவர் சிரித்தபடி, "நீங்க.." என்றார். "பஸ்ல பழக்கம்..ஒரு வாரமா வர்றல..அதான் " என்றேன். "காசு ஏதும் வாங்குனாருங்களா.." என்றார். "இல்லீங்க..ஏன்.." என்றேன்.

"அவரு ரொம்ப வருஷமா இங்கின வேலை செய்றாருங்க..ஓனர் அப்பா இருந்தப்ப..அவருதான் இங்க எல்லாம்..பெரியவரு போயிட்டாரு..பையன் வந்ததும்..வயசாயிடுச்சுன்னு போ சொல்லிட்டான்..இவருதான்..விடாம வந்துனுருக்காரு..டெய்லி காத்தால வந்துடுவாரு..நாங்க செக்யூரிட்டி இருந்தாலும், அவருதான் செக்யூரிட்டி மாதிரி ஆக்டிங்க் கொடுப்பாரு..அவரப்பத்தி எங்களுக்குத்தெரியும். அதனால, பேசாம வுட்றுவோம். எங்களோட அவருக்கு டீ மட்டும் கொடுப்பாங்க..பாவம் சார், பாதி டீ குடிச்சிட்டு..மீதிய வச்சு மதியம் சோத்துல ஊத்தி சாப்பிடுவாரு..ஆரம்பத்துல கேட்டதுக்கு..கீ (நெய்) ரைஸ் மாதிரி, டீ ரைஸ் ன்னுறா.. அவரு பசங்க யாரும் பாக்கிறதுல்ல..பேரன் மட்டும் மாசம் ஆயிர ரூபா கொடுக்கிறான் போல..அதுல, லூசு மனுஷன் பஸ் பாஸ் எடுத்துடுவாரு..அவரு வீட்டம்மாவும் வயசானது..அது ஏதோ வூட்டு வேல செஞ்சு..இவருக்கும் சோறு போடுது.. சர்ச்சுல எப்பாச்சும், ஏதோ கொஞ்சம் காசு, பழைய துணி கொடுப்பங்க போல..ரொம்ப எதுனா கஷ்டம்னாதா..எதும் காசு கேப்பாரு..நூறு..இரு நூறு..அவருக்கும் தெரியும்..நாங்க எங்கின போவோம்.." என்றவர். "அதான் கேட்டேன்..உங்ககிட்ட எதுனா காசு வாங்குனார்ரா..ஏன்னா, யாரும் அவரத்தேடி வந்ததில்ல.." என்றார்.

எனக்குப் பரிதாபமாய்ப்போனது. சைக்கிளில் ஒரு ஆள் பிளாஸ்கில் டீ கொண்டு வந்தார். ஒரு கப்பில் டீ ஊற்றிக்கொடுத்து கொரனோப்பற்றி புலம்ப ஆரம்பித்தார். "கட்டிட வேலைகாரங்கல்லாம் யாரும் இல்லப்பா..வியாபாரமே இல்லை.." என்றவர், "நம்ம முருகேசும் வரலையா..விடாம வந்துருவாரேப்பா..டெய்லி.." என்றார். வாங்கிய டீயை அந்த செக்யூரிட்டி என்னிடம் நீட்டினார். மறுக்காமல், வாங்கிக்கொண்டேன். அவரும் ஒரு டீ வாங்கிக்கொண்டார். அங்கிருந்த நோட்டில், எழுதப்போன டீக்காரர், "ஒன்னா..ரெண்டா..எழுத.." எனக்கேட்டார். செக்யூரிட்டி, "ஒன்னுனெ எழுது..நம்ம மேனேஜர்..உஷாரு..நீ ஒருத்தந்தான..ரெண்டு டீ கணக்கு எழுதியிருக்குன்னு கேப்பான்.." என்று சொல்லியவர் என் முன்னர் சொன்னதற்காக சங்கடப்பட்டார். நான் கவனிக்காது போலிருந்து விட்டு, கிளம்புகையில் ஐம்பது ரூபாய் கொடுத்தேன். வாங்க மறுத்தவரிடம், கையில் திணித்துவிட்டு கிளம்பினேன்.


அதன்பின், கொரானோ கோரத்தாண்டவம் ஆடத்தொடங்கியது. நானும் ஊரில் போய் மாட்டிக்கொண்டேன். அவ்வப்போது நம் முருகேசுவை நினைத்துக்கொள்வேன். ஒரு முறை போனும் முயற்சி செய்துப்பார்த்தேன். ஸ்விட்ச் ஆப் என்றே வந்தது. கவலையாயிருந்தது. என் மனைவிதான், போன் ரீசார்ஜ் பண்ணியிருக்க மாட்டாருங்க..என சமாதானம் செய்தாள்.


நாட்கள் ஓடிப்போனது. கொரானோ நிலைமை கட்டுக்குள் வந்து பேருந்து இயங்க ஆரம்பித்ததும் மிக எதிர்ப்பார்த்தேன், முருகேசைப்பார்த்து விடலாம் என்று. ஆனால், முருகேசுவை மட்டும் காணவேயில்லை. மீண்டும் ஒரு முறை கொடொனுக்குப்போய் பார்த்தேன். பழைய செக்யூரிட்டியெல்லாம் இல்லை. புதிதாயிருந்தவருக்கு முருகேசைப்பற்றித்தெரியவில்லை. பழைய செக்யூரிட்டிப்பற்றிக் கேட்டேன். "அவர்லாம் கொரனால போயிட்டாரு சார்.." என்றார் டீ குடித்தப்படி. 


வீட்டில் முருகேசுப்பற்றிப் பேசுவதை தவிர்க்க ஆரம்பித்தோம். ஆனால், மறக்க இயலவில்லை யாருக்கும்.


நேற்று, வாழை இலை வாங்குவதற்காக அலுவலகம் விட்டு நேரே அல்சூர் சென்றேன். ஒவ்வொரு அமாவசைக்கும் வாழை இலை வாங்குவதற்காக அல்சூர் செல்வேன். வாழை இலை பெங்களூரில் கிடைப்பது அரிது. அல்சூர் மார்க்கெட் நெரிசலில்..எதிரே..நேருக்கு நேர் 'முருகேஷ்'! எனக்கு அப்படியொரு குதூகலம். வினாடியில் ஆயிரத்தில் ஒரு பகுதி...என்னைப்பார்த்த முருகேஷ் சடாரென்று பார்வையைத்திருப்பிக்கொண்டு, தாடையிலிருந்த மாஸ்க்கை எடுத்து முகத்தில் இழுத்துக்கொண்டார். அவர் பின்னாலேயே ஒரு வயதான பெண்மணி..அவர் வீட்டம்மாவாயிருக்கும் என நினைக்கிறேன். அவர் என்னைத்தவிர்க்கிறார் என நன்றாகத்தெரிந்தது. கொடுத்தப் பணம் திருப்பி கேட்பேனோ எனத்தவிர்த்தாரோ..எனத்தெரியவில்லை. நான் சிலையாய் நின்றேன் கூட்ட நெரிசலில் அவர் போவதைப்பார்த்தபடி. கவனிக்காமல் போய்விட்டாரோ..என என்னை சமாதனம் செய்தபடியிருக்கையில், சற்று தூரம் சென்றவர், திரும்பிப்பார்த்ததைக் கவனித்தேன். மீண்டும் சடாரென்று, மாஸ்க்கை இழுத்துவிட்டபடி போய்விட்டார்.


ஒரு பக்கம் அதிர்ச்சியும், வருத்தமும் இருந்தாலும் அவர் இருப்பது, அதுவும் அவர் வீட்டம்மாவும் இருப்பது பெரு மகிழ்ச்சியாயிருந்தது. என் மனைவியிடமும், பையனிடமும் வேறு மாதிரி சொன்னேன். "நம்ம பிரதர் முருகேஷ், வீட்டம்மாவோட ஷாப்பிங்க் போறாருப்போல..நான் பஸ்ல இருந்தேன்..ஆனா, நல்லா பார்த்தேன்..நல்லா இருக்காரு.." என்றேன். "என்ன நீங்க..இறங்கி ஓடிப்போய்ப் பாத்துருக்கலாம்ல..எவ்வளவு சந்தோஷப்பட்டுறுப்பாரு...போங்க நீங்க.." என்றாள்.


அடுத்த அமாவசைக்கு வாழை இலை மடிவாளாவில் வாங்கிக்கொள்ளலாம் என நினைத்துக்கொண்டேன். என்ன சற்று தூரம். பரவாயில்லை, முருகேஷை சங்கடப்படுத்த விரும்பவில்லை இன்னொரு முறை.


============================

இந்த கதை "பறம்பு சிறுகதைப் போட்டியில்' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.










Saturday, July 3, 2021

முதுமை..இனிமை..!

 முதுமை..இனிமை..!


நாம் அடிக்கடி பார்க்க நேரிடுவதுண்டு, நேரிலும் சரி, வலைதளங்களிலும் சரி..சில முதியோர்கள் தள்ளாத வயதிலும் உழைப்பதை. அவர்களைப் பார்ப்பதற்கே பாவமாக இருக்கும். குறிப்பாக அவர்கள் பிள்ளைகள் மீது கடும் கோபமும் வருவதுண்டு. என்ன பிள்ளைகள் இந்த வயதிலும் பெற்றோரை இப்படி உழைக்க விடுகின்றனரே என வருத்தப்படுவதும் உண்டு.


சமீபத்தில், கொரனோ சற்று அடங்கிய போது அலுவலகம் செல்ல நேரிட்டது. தளர்வுகள் அறிவித்தும் முன்னர் போல் கூட்டம் இல்லை. பேருந்துகள் பெரும்பாலும் காலியாகவே இருந்தன. அதிலும், காலையில் சொற்ப மனிதர்களை மட்டுமே காண நேரிட்டது. பெரும்பாலும், காலையில் சிறு வியாபாரிகள் தங்கள் சரக்குகளை ஏற்றி செல்ல பயன்படுத்தினர். தலை சுமை வியாபார பெண்கள் அதிகம். கீரை, காய், பழம் என தங்கள் கூடைகளை பொறுமையாக நிறுத்தங்களில் ஏற்றி, இறக்கி வந்தனர். மற்ற சமயங்களில் நடவாத ஒன்று இது. ஓட்டுனரும், நடத்துனரும் யாராவது ஏறினால் சரி என்ற மன நிலையில் இருந்தனர்.


தொடர்ந்து மூன்று நாட்களாக, காலையில் என் நிறுத்ததில் ஒரு பாட்டி தென்பட ஆரம்பித்தார். ஒரு கூடை அதில் வாழைப்பழம் சீப், சீப்பாய். ஒரு பெரிய பையில் கீரை கட்டுகள் என நான் ஏறும் பேருந்தில் வர ஆரம்ப்பித்தார். ஏறும் போது, நடத்துனர் கூடையைத்தூக்கவும், பையைத்தூக்கவும் உதவினார். இறங்குகையில், நான் அவருக்கு உதவ ஆரம்பித்தேன். நிறுத்தத்தில்  இறங்கி தலையில் கூடையையும், கையில் பையையும் தூக்கிக்கொண்டு தள்ளாடியவாறு நடந்து போவார். அவரைப்பார்க்கையில் அவ்வளவு பாவமாயிருந்தது.


நேற்று பேருந்து வர தாமதமானது. முதல் நாளே நடத்துனர் தெரிவித்தார். "மார்னிங்க் சர்வீஸ் வசூலில்லை..சர்வீஸ் கம்மி பண்ணுவாங்க..சார்" என்றார். நானும், பாட்டியும் நின்றிருந்தோம். பாட்டி என்னிடம் மணி கேட்டவாறு, "லேட்டாயிருச்சு போல..வண்டி போயிருக்குமோ.." என்றார். நான் அவரிடம், "இல்லம்மா..பஸ்சு கம்மி பண்ணிருப்பாங்க..ஆளில்ல..அவங்களுக்கும் வசூல் ஆகணும்ல.. நீங்களும், நானும் கரெக்ட் டயத்துக்குதான் வந்திருக்கோம்.." என்றேன். அவர் சிரித்தபடி, "டைமுக்கு வியாபாரம் பண்ணி பழகிட்டு, கொஞ்சம் லேட்டானாலே பதறுது..நேரம் ஆச்சுனா வாடிக்கை போயிடுது..வெயிலு வேற ஏறிடுது.." என்றார்.


"ஏம்மா..பேசாம..ஒரு இடத்துல உக்காந்து வியாபாரம் பண்ணலாம்ல..பிள்ளைக என்ன செய்றாங்க..இப்படி..இந்த வயசுல கஷ்டப்படுறீங்களே.." என்று என் ஆதங்கத்தை கொட்டிவிட்டேன். என்னை உற்றுப்பார்த்தார். சிரித்துக்கொண்டே, "வயசானவங்க..வியாபாரம் பண்ணாலே ஏதோ கஷ்டப்படுறதா நினைச்சுக்கிறாங்க..அது யாரோ..ஒரு சில பேரு இருக்கலாம்..நிறைய பேரு..நாங்க வேணும்னுதான் வேலைப் பாக்குறோம்..பிடிக்காம.கஷ்டப்பட்டெல்லாம் பண்ணலப்பா..எனக்கெல்லாம்..வேலைப்பாக்கலன்னா, உசுரேப்போயிடும்!" "இன்னும் சிலபேரு..எங்ககிட்ட வாங்கிட்டு சில்லறை வச்சுக்க சொல்லுவாங்க..அது அவுக பெரிய மனசு..ஆனா, அதெல்லாம் பிடிக்காது எனக்கு..வியாபாரம் பண்றோம்..பொருளுக்கு காசு..அவ்வளவுதான்"..எனக்கு என்னவோ போலிருந்தது. நானே நிறைய பேரிடம் இப்படி என் பெருந்தன்மையை பறை சாற்றியிருக்கிறேன்.

"வாழ்க்கையில சோம்பலாயிடக்கூடாதுப்பா..அதே மாதிரி..யாராவது நமக்கு செய்ய மாட்டாங்களான்னும் நினைக்கப்படாது..அதுக்கு செத்துடலாம்" என்று முற்றிலும் புதிய பரிமாணத்தை விளங்க வைத்தார்.

பேருந்து வந்தது!


Saturday, April 10, 2021

யார் பூமி இது..!

சமீபத்தில் சொந்த ஊர் செல்ல நேரிட்டது. அங்கிருந்து இன்னொரு நண்பருடன் அவரது கிராமத்திற்கு சென்றோம். மதுரை-ராமனாதபுரத்திற்கிடையே இருந்த்தது. சரியான வெயில் தகித்தது. சித்திரை இன்னும் பிறக்கவேயில்லை, அதற்குள் இப்படியொரு வெயிலா என இருவரும் புலம்பியபடியே சென்றோம். அங்கேப் போனபின் தான் தெரிந்தது. நண்பர் ஏதோ நிலப்பிரச்சனை காரணமாக பஞ்சாயத்துப் பேசுவதற்காக உடன் அழைத்து சென்றிருக்கிறார் என. என்ன செய்வதெனத் தெரியாமல் கிராமத்தைப் பார்த்தபடி அவர் சொன்ன பிரச்சனையின் விபரங்களை ஆர்வமில்லாமல் கேட்டபடியிருந்தேன்.


கடைசியில் அவர் சந்தித்த முக்கிய நபர், என்னுடைய கல்லூரி கால எதிரியாயிருந்தார். கவனிக்கவும், நண்பர் இல்லை. என்னைக்கண்டவுடன், என் பெயர் சொல்லி உறுதிப்படுத்திக்கொண்டார். என்னை அழைத்து சென்ற நண்பருக்கோ மகிழ்ச்சி. ஆனால், அவருக்குத்தெரியாது எனக்கும் அவருக்கும் இருந்த 'நட்பு' எப்படி என்று. கல்லூரி கால கட்டத்தில், முதலாண்டு முதலே ஏதோ பிரச்சனையில் எங்களுக்கு நட்பேயில்லாமலிருந்தது. ஒரு முரட்டுத்தனம் கொண்ட நபராகவே இருப்பான். "கிராமத்திலிருந்துப் படிக்க வந்த உனக்கு இவ்வளவு திமிர்னா, நான் மதுரைக்காரண்டா.." என்பது போன்ற ஒரு அறியாமைப்பகை ஆரம்பித்து வளர்ந்திருந்தது.


இப்போதும், அதே தொனியில்தான் அவன் விசாரித்த விதம் இருந்தது. ஆனால், என்னால் இப்பொழுது அதைப்பெரிதாக எடுத்துக்கொள்ள இயலவில்லை. இருவருக்கும் வயதாயிருந்தது. நான் பெரிதாக ஏதும் ஆர்வம் காட்டிக்கொள்ளவில்லை. நண்பரிடம் ஏதெதோப் பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்ப எத்தனிக்கையில், "இவ்வளவு தூரம் அதுவும் இத்தனை வருஷம் கழிச்சு என் காலேஜ் பிரண்டை கண்ல காட்டிட்டு..உடனே போறீன்ங்கீறிங்க..வாங்க..வீட்டுக்கு" என அதட்டும் தொனியில் கூறவே, சரி, தலையைக்காட்டிவிட்டு கிளம்பலாம் என சென்றோம். 


நல்ல பெரிய கிராமத்து வீடு. திண்ணை, முற்றம் என நன்றாக இருந்தது. திண்ணையில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தவுடன், தாத்தா என ஒரு பெண் குழந்தை ஓடி வந்து அவரைக்கட்டிக்கொண்டது. என்னைப்பார்த்து சிரித்து, "நான் பேத்தி எடுத்துட்டேன்பா..உங்கள மாதிரியில்ல..சீக்கிரமே கல்யாணம் ஆயிடுச்சு.." என்றபடி, கை விசிறி இரண்டை நீட்டினார். மேலே பேனிருந்தது. கரண்ட் இல்லை போலும் என நினைத்துக்கொண்டேன். சிறிது நேரத்தில், ஒரு தட்டு நிறைய நுங்கும், பெரிய கிளாஸ்களில் பதனியும் ஒரு நடுத்தரப்பெண் கொண்டு வந்து கொடுத்து வணக்கம் சொன்னார். "இதுதான் என் பொண்ணு ப்பா" என்றார்.

நீண்ட வருடங்களுக்குப்பின் நுங்கும் பதனீரும் தேவாமிர்தமாயிருந்தது. மீண்டும் கிளம்ப எத்தனித்தோம். "அது சரி, சாப்பிடாம யாரு விடுறது.." என்றபடி, "நாச்சியா.." என்றார். "உக்காரலாம்ப்பா" என்று குரல் உள்ளேயிருந்து வந்தது.  உள்ளே பாய் விரித்து, வாழை இலைப் போட்டு பரிமாறியிருந்தனர் தயாராய். என்ன சொல்வதெனத்தெரியாமல், சாப்பிட உட்கார்ந்தோம். வியர்த்து வழிந்தது. அப்போதும் அவர் பெண் கை விசிறியால் வீசினார். அவரோ ஒரு கையால் விசிறிக்கொண்டே, மடியில் பேத்தியை வேறு வைத்துக்கொண்டே சாப்பிட்டார்.  "ஏன் கரண்ட் இல்லையா" என்றேன்.  அவர் பேத்தி, "பேன் போடக்கூடாது..குருவி கூடு கட்டிருக்கு" என்றாள் மழலையில். "குருவி ஒரு இடம் விடாம கூடு கட்டி வச்சுருக்கு..பேன் போட முடியல..அதான்" என்றார் அவர் மகள் எங்களுக்கு விசிறியபடி.

நான் அவர் பேத்தியிடம், "உன் வீட்டுக்குள்ள வந்து, குருவி அது வீடு கட்டியிருச்சா.." என்றேன் சிரித்தபடி. "அதுக இடத்துல தான் நம்ம வீடு கட்டிருக்கோம்..இங்கின முன்னாடி மரந்தான் இருந்துச்சு.." என்றாள். எனக்கு ஆச்சரியமாய்ப்போனது அவள் பேச்சு. "அப்படியா..உனக்கு எப்படித்தெரியும்.." என்றேன். "தாத்தா சொல்லுச்சு.." என்று வெட்கப்பட்டுக்கொண்டாள். 

அப்படியொரு அழகு!


Tuesday, February 2, 2021

 லெமன் சாதம்



"எல்மிச்ச சாதம்"..! இப்படித்தான் நான் அழைப்பது 'எலுமிச்சம்பழ சாதத்தினை' என் பள்ளி பருவ நாட்களில். சிறு வயதில், என் பெரியம்மா மூலம் அறிமுகமாகியது. பார்த்தவுடன் பிடித்துப்போனது. அதன் இள மஞ்சள் நிறமும், மேனியில் எண்ணைத்தடவிய பொரித்த நிலக்கடலையும், கரும்பச்சை நிற கறிவேப்பிலை, கடலை பருப்பு, கடுகு என பெருங்காய நறுமணத்துடன் ஆளை மயக்கியது. பொல, பொலவென உதிரியாயிருந்த சாதத்தை எடுத்து வாயில் போட்டால் அதன் எலுமிச்சை வாசனையுடன் கூடிய அந்த புளிப்பு சுவை கிறங்கடித்தது. அப்போது மிஞ்சிப்போனால், எனக்கு ஏழெட்டு வயதிருக்கும். அது முதல் 'எலுமிச்சை சாதம்' என்னுடைய 'ஆகப்பிரியமானதாகிப்போனது'. 

ஐந்தாம் வகுப்பு வரை, வீட்டருகே பள்ளிக்கூடத்தில்தான் படித்தேன். தினமும் மதியம் சாப்பாட்டிற்கு வீட்டுக்கு வந்து போவேன். சாப்பிட்ட கையோடு பள்ளிக்கு ஓடி விடுவேன், விளையாடுவதற்காக. மதியம் முதல் வகுப்பு ஆரம்பிக்கும் வரை உணவு இடைவெளியில் ஒரே ஆட்டம்தான். சாப்பாடு கொண்டு வரும் மாணவர்களும் சீக்கிரமாய் சாப்பிட்டு விளையாட்டில் சேர்வதுண்டு. அப்போது, யாராவது மதிய சாப்பாட்டிற்கு எலுமிச்சை சாதம் கொண்டு வந்து சாப்பிடுவதைப்பார்க்கையில் "சே..நம்மளும் போர்ட் ஹைஸ்கூல் சேர்றோம்..டெய்லி சாப்பாடு எடுத்துட்டுப்போறோம்..அதுவும் எலுமிச்ச சாதம்தான்.." என எண்ணிக்கொள்வேன். ஏன் போர்ட் ஹைஸ்கூல் என்றால் அதுதான் வீட்டிலிருந்து தூரம். அப்போதுதான் சாப்பாடு கட்டி கொடுப்பார்கள். 

எப்படியும், என் அம்மாவை நச்சரித்து வாரம் ஒரு முறையாவது எலுமிச்சை சாதம் செய்ய வைத்துவிடுவேன். ஆனால், என் பெரியம்மா செய்தது போலிருக்காது. என் அம்மா, வேர்க்கடலையெல்லாம் போட மாட்டார்கள். இருந்தாலும் எனக்குப்பிடிக்கும். என் அம்மா செய்யும் உருளைக்கிழங்கு மசாலா இருந்தால் போதும். அன்றைக்கு எலுமிச்சை சாதம் என் பிறவிப்பயனைக்காட்டும். உருளைக்கிழங்கு மசாலா இல்லாத சமயங்களில், அரிசி வடாகம், கூழ் வடாகம் சமன் செய்யும்.  என் அம்மா வேடிக்கையாய், "இவனுக்கு எலுமிச்சை மரம் இருக்கிற வீட்டு பொண்ணாதாண்டா..பார்க்கணும்" என்பார். என் அண்ணகள் அம்மாவிடம், "ஒயாம எப்பப்பார்த்தாலும்..எலுமிச்ச சாதமா" என சத்தம் போடுவர். என் அம்மாதான் எனக்காகப் பரிந்து பேசுவார். "போத்திக்கு அதானடா பிடிச்சிருக்கு..இஷ்டமா சாப்பிடுறான்" என்பார். போத்தி என்பது என் செல்ல பெயர். அதுவும்,  நான் கடைக்குட்டி என்பதால் அண்ணன்களும் ஒன்றும் சொல்லமாட்டார்கள். 


ஆறாம் வகுப்பும் வந்தது. நான் எதிர்பார்த்த ஹைஸ்கூல் இல்லையென்றாலும், இதுவும் தூரமாய்த்தானிருந்தது. காலையிலேயே, என் அம்மா சுடச்சுட ஏதாவது சமைத்து சாப்பிட வைத்து, தூக்குசட்டியில் கட்டியும் கொடுத்து விடுவார்கள். அப்போதெல்லாம் தூக்கு சட்டிதான். நான் ஒன்பதாம் வகுப்புக்கு மதுரை வந்தவுடன் தான் 'டிபன் பாக்ஸ்' அறிமுகமானது. மதியம் உணவு இடைவேளையில் கட்டிகொடுத்த சாப்பாட்டை சாப்பிட்டு இங்கேயும் விளையாட்டுதான். பள்ளி அருகில்தான் ஜானகி ராம் மில்லிருந்தது. ராஜபாளையத்தில் பஞ்சு மில்கள் மிகப்பிரசித்தம். அந்த மில்லின் கேண்டீன் மில்லிற்கு வெளியே இருக்கும். அது பொதுவானது. எல்லோரும் அங்கே சாப்பிடலாம். ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து சில மாணவர்கள் வந்து படிப்பதுண்டு. அவர்கள், பெரும்பாலும் சற்று வசதியானவர்கள். மதியம் அந்த மில் கேண்டீனில்தான் சாப்பிடுவர். சில மாணவர்கள், அவர்களுடன் சென்று தான் கொண்டு வந்திருந்த சாப்பாட்டை அங்கே 'டேபிளில்' உட்கார்ந்து சாப்பிடுவார்கள். 'டேபிளில்' உட்கார்ந்து சாப்பிடுவதற்காகவே அவர்கள் விரும்பி போவதுண்டு. ஓட்டலில் வாங்கி சாப்பிட முடியவில்லையென்றாலும், அங்கே தாம் கொண்டு வந்த சாப்பாட்டை டேபிளில் உட்கார்ந்து சாப்பிடுவது என்பது தனி அலாதிதான்.

நானும், ஏழாம் வகுப்பு வந்தவுடன் அவ்வப்போது ஸ்ரீவில்லிப்புத்தூர் நண்பர்களுடன் மில் கேண்டீனுக்குப் போக ஆரம்பித்தேன். நான் கட்டிக்கொண்டு போகும் உணவைத்தான் சாப்பிடுவேன். அங்கே வாங்கி சாப்பிடும் அளவுக்கெல்லாம் காசிருக்காது. ஒரு நாள், என் நெருங்கிய நண்பன் ரமேஷ் பாலையா 'லெமன் சாதம்' வாங்கினான். கேண்டீனில் 'லெமன் சாதம்' என்றுதான் எழுதியிருப்பார்கள். லெமன் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், வடை அவ்வளவுதான் அவர்கள் மதிய மெனு. லெமனும், தக்காளியும் முப்பது பைசா, தயிர் இருபது, வடை பத்து பைசா, அவ்வளவுதான். என் தினசரி பாக்கெட் மணி பத்து பைசா. ஆனாலும், அதில் வடை வாங்கி சாப்பிட மனமிருக்காது. வீட்டிற்குத்தெரியாமல், கேண்டீனில் சாப்பிடுவதென்பது ஒரு குற்ற உணர்வை உண்டாக்கும். ரமேஷ் பாலையா தட்டிலிருந்த லெமன் சாதம் வித்தியாசமாயிருந்தது. மஞ்சள் நிறம் சற்றி வெளிறி, குழைவாயிருந்தது. அதற்குத் தொட்டுக்கொள்ளவென்று வெங்காய மசால் கொடுத்திருந்தனர். நான் பார்ப்பதைப்பார்த்துவிட்டு, என் தூக்குசட்டி மூடியில் கொஞ்சம் வைத்தான்.  சாப்பிட்டுப்பார்த்தால், புது மாதிரியாயிருந்தது. அதுவும் அந்த வெங்காய மசால் என் அத்தனை நாள் உருளைக்கிழங்கு மசாலை மறக்க செய்தது. நன்றி கெட்டவனாகிப்போனேன். இத்தனைக்கும் அது சாதரண, வெறும் வெங்காயம் மட்டுமே போட்டு செய்த மசால். அந்த 'லெமன் சாதமும்' என் 'எலுமிச்சை சாத'ப்பாசத்தை பரீசிலிக்கச்செய்தது.

வீட்டிற்கு வந்ததும் ஆரம்பித்துவிட்டேன். என் அம்மாவும்,  "சாதம் பச்சரிசியாயிருக்கும்..குழைஞ்சிருக்கும் போல..மஞ்சத்தூளு கம்மியாப்போட்டுருப்பாங்க.." என்றார். எனக்கு அப்போதுதான் தெரியும், மஞ்சத்தூள் தான் அந்த கலருக்கு காரணம் என்று. நான் நினைத்திருந்தேன் எலுமிச்சைக்கலர் அப்படியே பிழியும்போது வந்து விடுமென்று. நான் சொன்னதைக்கேட்டு என் அம்மாவும், அக்காவும் சிரிக்கிறார்கள். வெங்காய மசாலைப்பற்றி சொன்னவுடன், "அவன் வாங்கிற முப்பது பைசாவுக்கு..அவன் என்ன உருளைக்கிழங்கு மசாலாவா கொடுக்க முடியும்..வெறும் வெங்காயந்தான் போடுவான்" என்றனர். என்னால் சமாதானம் ஆக முடியவில்லை. என்னைப்புரிந்து கொண்ட என் அக்கா "சரி..ஒரு நாள் நீயும் வாங்கி சாப்பிடு..காசு தர்றோம்" என்று சொன்னவுடன் எனக்கு அப்படி ஒரு ஏகாந்தம். ஆனால், என் அம்மாவோ "அது என்ன பழக்கம்..வெளில சாப்பிடுறது.. நாளக்கே எலுமிச்ச சாதம் செஞ்சு தர்றேன்..எடுத்துட்டுப்போ" என்றார். எனக்கு கோபம் வந்து விட்டது. கைக்கு வந்தது வாய்க்கு வராமல் போய் விடுமோவென்று. "ஒன்னும் வேணாம்..உன் சாதம் நல்லாயில்லை..நீயே சாப்பிடு.." என சொல்ல முதுகில் விழுந்தது ஒன்று.

அதன்பின் கேட்கவேயில்லை. நமக்கு 'எலுமிச்சை சாதம்' தான். 'லெமன் சாதத்திற்கு' கொடுப்பினை இல்லை என நொந்து கொண்டேன். அவ்வப்போது மில் கேண்டீனுக்குப்போவதுண்டு. ஆனால், லெமன் சாதம் வாங்கவுமில்லை. ரமேஷ் பாலையா கொடுப்பதை சாப்பிடவுமில்லை. இருந்தாலும், அம்மா  எலுமிச்சை சாதம் கட்டித்தருவது தொடர்ந்தது. ஆனால், வீராய்ப்பாய் என் சந்தோஷத்தை அம்மாவிடம் காட்டிக்கொள்வதில்லை. 


அந்த நாளும் வந்தது! ஒரு நாள் காலை, வீட்டிற்கு தந்தி ஒன்று வந்தது. அப்போதெல்லாம் தந்தி என்பது துக்க செய்திக்காகவே என்றிருந்தது. அவ்வளவுதான், என் அம்மா வாய் விட்டு எல்லா தெய்வங்களையும் வணங்க ஆரம்பித்தார். எதிர்பார்த்தது போலவே, அம்மாவின் சித்தப்பா, எங்கள் சின்ன தாத்தா காலம் எய்திருந்தார். அப்பா வேறு ஊரில் இல்லை. அம்மா அழுகையூடே கிளம்பினார், திண்டுக்கல்லுக்கு. அண்ணனிடம் காசு கொடுத்து, ஓட்டலில் சாப்பிட்டு சமாளிக்க சொன்னார், அப்பா வரும் வரை. அவ்வளவுதான், எனக்கு அப்போதே பிடிபடவில்லை. ஒன்று, ஓட்டலில் சாப்பிடலாம். அதை விட முக்கியமாய், மதியம் லெமன் சாதம் சாப்பிடலாம். அத்தனை பூரிப்பு எனக்கு.

என் அண்ணன் நல்ல பெயரெடுப்பதற்காகவே, "நானே சமைக்கிறேன்..அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிடுங்கடா..ஓட்டல்லாம் வேணாம்.." என்றான். என் சின்ன அண்ணன் சரி என்பது போல் தலையாட்டினான். எனக்கு கோபம், அழுகை பொத்துக்கொண்டு வந்தது. கோபம் காட்ட இயலாத இடத்தில், அழுகைதானே வரும். என் சின்ன அக்காதான், "நம்ம வேணா வீட்டில சாப்பிட்டுக்கலாம்..பாவம் போத்தி ஓட்டல்ல வாங்கி சாப்பிட்டுக்கிட்டும்" என சொன்னாள். அதற்கும் மசியாத என் பெரியண்ணன், "இப்ப டைம் ஆச்சு, சாப்பாடு கட்டி தர முடியாது..மத்தியானம் வேணா மில்லு கேண்டீன்ல சாப்பிட்டுக்க..நைட்டும், நாளைக்கும் நான் சமைக்கிறதுதான்" என்றான். இது போதுமப்பா..என்று மானசீகமாய் கும்பிட்டேன்!


கையில் முப்பது பைசா..! போனவுடனே, ரமேஷ் பாலையாவிடம் சொல்லிவிட்டேன்.அன்றைக்குப்பார்த்து அவன் வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்தான். அன்றைய காலை வகுப்பு நீண்டதாயிருந்தது. மதியம் சாப்பாட்டு மணி அடிக்கவும், நானும் ரமேஷ் பாலையாவும் கேண்டீனுக்கு ஓடினோம். டேபிளில் இடம் பிடிக்க வேண்டுமே. நான் கல்லாவில் டோக்கன் வாங்கப்போனேன். ரமேஷ் பாலையா டேபிளில் இடம் பிடித்து வைத்திருந்தான். "லெமன் சாதம்ம்ம்.." என்று முப்பது பைசாவைக்கொடுத்தேன். கொடுக்கும்போதே எனக்கு அவ்வளவு சிரிப்பு. அவரிடம் டோக்கன் வாங்கி, அருகில் நிற்கும் சர்வரிடம் கொடுக்க வேண்டும். அவர், அங்கிருக்கும் பெரிய பாத்திரங்களிலிருந்து ஒரு வட்டாவில் அளவாய் எடுத்து தட்டில் வைப்பார். அவரிடம் டோக்கனை நீட்டியவுடன், "என்ன இன்னைக்கு வீட்டிலிருந்து கொண்டாரலையா.." என்றார் சிரித்துக்கொண்டே. என்னை அவருக்குத்தெரியும். நானும், ரமேஷ் பாலையாவும் அடிக்கடி போவதால் பார்க்கும்போதெல்லாம் சிரிப்பார். ரமேஷ் பாலையாதான் சொல்லுவான். "நான் உனக்கு பங்கு தர்றதுனால..அவர் கொஞ்சம் கூட வைக்கிறாருடா" என்று. 

லெமன் சாதத்தைத் தட்டில் அளவாக வைத்து, அந்த வெங்காய மசாலாவை ஒரு கரண்டியில் அள்ளி வைத்தார். தட்டை கையில் வாங்கிய நான், ஏதோ பெரிய வெற்றிக்கோப்பையை வாங்கியதுப் போல் கனவில் மிதந்தேன். வாங்கித்திரும்பவும், எங்கிருந்தோ இடம் பிடிக்கும் அவசரத்தில் வந்த ஒருவன் என் தட்டின் மீது மோதித்தொலைந்தான். அவ்வளவுதான். என் நீண்ட நாள் தட்டிலிருந்த கனவு தரையில் சிதறிப்போனது. நான் திரும்பி சர்வரைப்பார்க்க அவரும் விக்கித்துப்போனார். என்னையும், கல்லா மேசையினையும் மாறி, மாறிப்பார்த்தவர், விருட்டென்று, இன்னொரு தட்டில் கண்ணிமைக்கும் நேரத்தில் லெமன் சாதத்தையும், வெங்காய மசாலாவையும் வைத்து நீட்டினார். எனக்கு என்ன செய்வதெனத்தெரியவில்லை. "அட, வாங்கிட்டு நகருப்பா.." என்று கோபமானார். எனக்குப்புரியவில்லை. கொஞ்சம் நேரம் முன்னர் சிரித்தவர் ஏன் இப்படி விரட்டுகிறார் என்று. தட்டை வாங்கிக்கொண்டு ரமேஷ் பாலையாவை நோக்கி நகர்ந்தேன். துளியும் முன்பிருந்த சந்தோஷமில்லை.

நான் டேபிளில் உட்காரவும், பின்னால் படீரென ஒரு சத்தம். திரும்பிப் பார்க்கையில் அந்த சர்வர் காதில் கை வைத்து குனிந்திருந்தார். கல்லாவிலிருந்த அந்த பருத்த நபர், வேட்டியை மடித்தபடி, "ங்கொப்பன் வீட்டு சொத்து..வாரி வழங்கு.." என்றபடி அவர் கழுத்தில் கையை வைத்து ஒரு தள்ளு தள்ளினார். அவர் தடுமாறியபடியே வாசல் அருகே போய் நின்றார். ஒரே அமைதி மொத்த இடமும். டோக்கனுடன் நின்றவர்களுக்கு அந்த கல்லா நபரே தட்டில் வைத்து கொடுத்துக்கொண்டிருந்தார். நானும், ரமேஷ் பாலையாவும் சாப்பிடாமல் உட்கார்ந்திருந்தோம், நடப்பதைப் பார்த்துக்கொண்டு. எங்களைப்பார்த்தபடி, "இங்க டோக்கன் வாங்கி சாப்பிடுறவங்க மட்டும் சாப்பிடுங்க..மத்தவங்கள்லாம்..வெளியே போ.." என்றார் சத்தமாக. சில  பள்ளி மாணவர்கள் எழுந்து போக ஆரம்பித்தனர். திறந்து வைத்திருந்த டிபன் பாக்சை மூடியபடி, "நீ சாப்பிட்டு வா.." என்று எழுந்தான் ரமேஷ் பாலையா. எனக்கு அப்படி ஒரு ஆத்திரம். ஒரு லெமன் சாதம் நிம்மதியாய் சாப்பிட முடியவில்லையே என்ற ஆதங்கம் ஒரு புறம், நண்பனை வெளியே போய் சாப்பிட சொன்ன அவமானம் என்று எல்லாம் சேர்ந்து கொண்டது. விருட்டென  எழுந்தேன். டேபிளில் லெமன் சாதம் அப்படியே இருந்தது. டேபிளிலிருந்த மற்றவர்கள் எங்களைப்பார்த்தனர். ரமேஷ் பாலையா கையைப்பிடித்தபடி வெளியேறினேன். 

வெளியே நின்றிருந்த சர்வர் என்னைப்பார்த்து சைகையில் சாப்பிட்டியா எனக்கேட்டார். ஆம் என தலையை ஆட்டினேன். அந்த கணம் குபுக்கென்று கண்ணீர் முட்டியது. ஆனால், அவரைப்பார்த்து புன்னகைத்தேன். 


அதன் பின்னர், என் அம்மா எலுமிச்சை சாதம்  செய்யவா என கேட்கும்போதெல்லாம், "வேண்டாம்மா..இப்ப பிடிக்கல..!" என்று சொல்ல ஆரம்பித்தேன்.

Thursday, January 28, 2021

தோட்டக்காரன்


சமீபத்தில், நான் பணிபுரியும் பல்கலைக்கழகம் இடம் மாற்றலாகிப்போனது. சுமார் ஆறு ஆண்டுகளாய் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த பல்கலைக்கழகம் இப்போது சொந்த இடத்தில் கட்டிய புதிய கட்டிடத்திற்கு மாறிப்போனது. நாங்கள் முதலில் இருந்த இடத்தை சொந்த இடத்தைப் போல் பாவித்து வந்தோம். ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவருமே. அந்த இடத்தில் முன்புறம், பின்புறம் மற்றும் ஊடாக என எங்கும் பச்சை, பசேலென தோட்டம் இருக்கும். அதை முழுக்க, முழுக்க ஒரு தோட்டக்காரர்தான் கவனித்துக்கொண்டார். அவர் பெயர் வெங்கடப்பா. அவருக்கு ஒரு ஐம்பது, அறுபது வயதிருக்கும் என கணித்திருந்தேன். ஆனால், ஒரு நாள் அவர் சொல்லித்தான் தெரிந்தது. அவருக்கு வயது எழுபத்தி ஂமூன்றாம்! 


காலையில் நாங்கள் போகும் முன்னரே வேலையில் இருப்பார். தண்ணீர் அடிக்க, களை எடுக்க, பூச்சி மருந்து, உரம் தெளிக்க என முழு பராமரிப்பும் அவர்தான். அங்கே வேலையில் சேர்ந்தபின் தான், அவர் அறிமுகத்தில் நிறைய செடிகளைத் தெரிந்துகொண்டேன். அவர் ஒவ்வொரு செடியையும் பற்றி கூறுகையில் அத்தனை ஆச்சரியமாயிருக்கும். வெற்றிலை, வால் மிளகு, கருந்துளசி, தூதுவளை, பிரண்டை, ராம் பழம், அனுமன் பழம் (சீத்தாப்பழம் போலவே பெரிது, நிறம் வேறு). கீரைகளில் அத்தனை வகை. வாழை, பப்பாளி என இல்லாதது இல்லை. விளையும் காய், பழங்களை கேட்பவர்களுக்கு கொடுப்பார். பெரும்பாலும், உணவு விடுதிக்கே கொடுத்து மாணவர்களுக்கு கொடுக்க சொல்லுவார். "எத்தனைப் பேரு இதெல்லாம் சாப்பிட்டுறாப்பங்களோ..இல்லை, இனியும் தான் கிடைக்குமா.." என்று கன்னடத்தில் சொல்லுவார். யாரையும் செடியைத்தொட விட மாட்டார். புதிதாக சேரும் மாணவர்கள் தெரியாமல், இலை, பூவைப்பறித்தால் திட்டாமல் அறிவுறுத்துவார். அவரது அணுகுமுறையே, நம்மை மாற்றிவிடும். நிறைய மாணவர்கள் அவருடன் நெருக்கமாகி சமயங்களில், முதுகில் தெளிப்பான்களை மாட்டிக்கொண்டு பூச்சி மருந்து அடிக்கவும், உரம் போடவுமாய்த் திரிவர். 

அவரிடம் நெருங்கி பழகுவோரிடம் மட்டும் பிறந்த நாளைக் கேட்டு அவரது பாக்கெட் நோட்டில் குறித்து வைத்துக்கொள்வார். மறக்காமல், ஒரு செடியை அழகானத்தொட்டியில் வைத்து பிறந்த நாளன்று பரிசளிப்பார். அவர் கொடுத்த துளசி, ரோஜா என் வீட்டில் இன்னமும் அவரை நினைவூட்டுகிறது.


கொரானா கால கட்டத்தில், நாங்கள் எப்போதாவதுதான் அலுவலகம் போவதுண்டு. மாணவர்களும் வேறு இல்லை. மொத்த வளாகமே வெறிச்சோடிப்போனது. நான் போகும்பொதெல்லாம் அவர் அங்குதானிருப்பார். ஒரு நான்கைந்து பேர்தான் போவோம். எங்களுக்கு அங்கிருக்கும் வெற்றிலை, துளசி வேறு ஏதேதோ போட்டு கொதிக்க வைத்து குடிக்கக்கொடுப்பார். கொரானா அப்பனே வந்தாலும் நெருங்காதென்பார்.  எல்லா செடி, மரங்களும் நன்றாய் வளர்ந்திருந்தது. "இந்த பூவைப்பாருங்க..இந்த பழம் பார்த்தீங்களா..இது எப்படி வளர்ந்துருச்சுப்பார்த்தீங்களா.." என்று ஒரு குழந்தையைப்போல குதூகலிப்பார்.  


புதிய வளாகத்திற்கு, இங்கிருக்கும் செடி, மரங்களையெல்லாம் 'அப்படியே' எடுத்துக்கொண்டு போய் விட முடியும் என யாரோ யோசனை சொல்ல, நிர்வாகம் சரியென முடிவெடுத்தது. அதற்கென 'வெண்டார்' ஒருவர் அனுமதிக்கப்பட அவர்கள் மரம், செடி என 'அலேக்காய்' த்தூக்க ஆரம்பித்திருக்கின்றனர். நம் தோட்டக்காரர் வெங்கடப்பா அதற்கு துளியும் சம்மதிக்க வில்லை.  அவர் சம்மதத்தை யாரும் எதிர்பார்க்கவுமில்லை. அவரை ஒரு பொருட்டாய் கூட மதிக்கவில்லை. எங்களைப்போன்ற அவரிடம் பழகிய ஆட்களும் யாருமில்லை அப்போது. எனக்கு போன் பண்ணி, "நீங்களாவது எடுத்து சொல்லுங்கள்..அது பாவம்..வளர்ந்த மண்ணிலிருந்து மரத்தை பிடுங்கக்கூடாது..செத்துப்போவும்..கொலைக்கு சமம்.." என புலம்பினார். நான் கையறு நிலையில் இருந்தேன்.


நீண்ட நாட்களுக்குப்பின் அலுவலகம் அழைக்கப்பட்டோம், முற்றிலும் புதிய, மிகப்பெரிய வளாகம். இன்னமும், கட்டிட வேலை முடிந்தபாடில்லை. ஒவ்வொருவரும் புதியதாய்த்தெரிந்தனர். கிட்டத்தட்ட பத்துமாதங்கள் வீட்டிலிருந்தே வேலை செய்து பழக்கப்பட்டிருந்தோம். இயற்கை சூழலில் இதற்கு முன்னர் இருந்து விட்டு இப்போது படு செயற்கையாயிருந்தது. 


மாலையில் 'கேட்'டருகே செல்கையில், செக்யூரிட்டியிடம் யாரோ சத்தமாய் ப்பேசிக்கொண்டிருந்தது கேட்டுத்திரும்பினேன். அட..நம்ம வெங்கடப்பா..தோட்டக்காரர். ஆள் மெலிந்து, தாடியுடனிருந்தார். என்னைப்பார்க்கவும் மகிழ்ந்துப்போனார். நான் செக்யூரிட்டியிடம் அவரைப்பற்றிக்கூறினேன். அவரோ "எல்லாம் தெரியும் சார்..இந்த ஆளை உள்ளார விடக்கூடாதுன்னு சொல்லிருக்காங்க..இன்னும் இந்தாளு நா வச்ச செடி..மரம்னு வந்துன்னே இருக்காரு...அதுக்கெல்லாம் ஆளுங்க வந்துட்டான்ங்கன்னு சொன்னா கேக்க மாட்டேங்கிறாரு.." என்றார்.  பழைய வளாகத்திலிருந்து எடுத்து வந்து 'வைத்த' சில மரங்கள் இங்கே வளர ஆரம்பித்து விட்டதாம். அதையெல்லாம் அவர் பார்ப்பதற்காக தினமும் வர ஆரம்பித்திருக்கிறார். வந்தவர் சில அறிவுரைகளும் சொல்ல அது, புதியதாய் 'லேண்ட்ஸ்கேப் & ஹார்டிக்கல்ச்சர்' பொறுப்பேற்றவருக்குப்பிடிக்கவில்லை. அவரை இனிமேல் உள்ளே வரக்கூடாதென சொல்லிவிட்டார்களாம்.


நான் எனது ஷட்டில் செர்வீஸ் வண்டியில் செல்லாமல், நகர்ப்பேருந்தில் பயணிக்கலாம் என நடக்க ஆரம்ப்பித்தேன், அவருடன் பேசுவதற்காகவே. என்னுடன், வெங்கடப்பாவும் அவரது டிவிஸ் 50 ஐ தள்ளிக்கொண்டே நடக்க ஆரம்பித்தார். அவர் பேச்சு முழுவதும் அங்கிருந்து இங்கு நட்டு வைத்த செடி, மரங்களைப்பற்றியே இருந்தது. வாடிப்போய், இறந்த மரத்தைப்பற்றிக்குறிப்பிடுகையில் மிக வருத்தமாய்க்குறிப்பிட்டார். ஒன்றிரண்டு பிழைத்துத்துளிர்க்க ஆரம்பித்து விட்டதை அத்தனை மகிழ்வாய்க்குறிப்பிட்டார். 


பேருந்து நிறுத்தம் வந்தவுடன் கேட்டேன். "நீங்கள், அந்த பழைய இடத்துக்குப்போகவில்லையா..அங்கே வேறு ஏதோ ஸ்கூல் வரப்போவுது போல..அங்க போயி தோட்ட வேலை கேக்கலாமில்லையா.." என்றேன். என்னை ஊடுருவிப்பார்த்தவர், "ஸ்கூல் இல்லை ஏதோ காலேஜ் மாதிரி இருக்கு..என்னை கூப்பிட்டாங்க.." என்றவர், "எப்படி சார்..அங்க போக முடியும்..அத்தனை வருஷம்..நான் வளர்த்த செடி மரத்தையல்லாம்..வேரோடு பிடுங்கின இடத்துல போய் எப்படி வேலை பார்க்க முடியும்.." என்றார் எங்கோ பார்த்தபடி.


பேருந்து வருவது தெரிந்தது. செலவுக்கு வைத்துக்கொள்ளுங்கள் என நூறு ரூபாய்க் கொடுத்தேன். வாங்க மறுத்தவர், "செக்யூரிட்டி வேலைக்கு கேட்டிருக்கேன்..என்று சிரித்தபடி, "அந்த ரோஜா செடி எப்படியிருக்கு..ரெண்டு வருஷமாச்சுன்னு நினைக்கிறேன்..மண்ண, தொட்டியை மாத்திடுங்க" என்றார். 


பேருந்தில் ஏறியவுடன், பைகளை மடியில் வைத்தேன். வழக்கமாய் ஒரே ஒரு லேப்டாப் பைதான். இன்று, அலுவலகத்தில் எல்லோருக்கும் ஒரு பையில் ' சிறிய ஹேண்ட் சானிடைசர், நாலைந்து பேஸ் மாஸ்க்குகள் மற்றும் ஒரு வாழ்த்து அட்டை' கொடுத்திருந்தனர். வாழ்த்து அட்டை 'வெல்கம் டூ நியூ கேம்பஸ்' என மின்னியது, ஒரு பிளாஸ்டிக் ரோஜாவுடன்!

---