Friday, September 29, 2023

மழை பெய்யணுமில்ல..!

வீட்டிற்கு வந்து எடுத்து வைக்கும் போதுதான் கவனித்தேன், கூடுதலாக ஒரு பொட்டலம் இருந்ததை. அதை பிரித்துப் பார்த்தால் கேசரி ! இள மஞ்சள் நிறத்தில் தக தகவென வாழை இலையில் மின்னியது.  "இட்லி மட்டும் போதும் னு தானே சொன்னேன்.. கேக்குறதே இல்லை.. இஷ்டத்துக்கு வாங்கிட்டு வர்றது..!" என்றாள் என் மனைவி. "சூப்பர்.. கேசரி யா..!" என்றான் என் மகன். எனக்கோ யோசனை.. நான் சொல்லவே இல்லையே.. பாவம் யாருக்கு கொடுக்க வேண்டியதை எனக்கு கொடுத்து விட்டார் போல என நினைத்தேன். பாவம் இந்நேரம் யாரோ வீட்டில் ஏமாந்து போகும் ஒருவரை, அது குழந்தையாய் கூட இருக்கலாம். அவர் மனைவியிடம் திட்டு வாங்குவதையும் நினைத்துக் கொண்டேன். அவர் மீண்டும் வந்து அந்த ஓட்டல் சர்வரை திட்டலாம். கல்லாவில் இருப்பவரை காசு வாங்கியதற்காக சண்டையிடலாம். 

அப்போதுதான் உறைத்தது, நான் அதற்கு காசே கொடுக்க வில்லை என்று. அது ஒரு பழைய ஓட்டல். விட்டல் என பெயர், அத்திப்பள்ளியில்! அதை 'பட்டர்' ஓட்டல் என்றே அழைத்தனர். கன்னடத்தில் பட்டர் என்றால் பிராமணர் என பொருள். நம்மூர் 'பிரமாணாள் கபே ' போல். நான் ஆனேகல் வீடு மாறியவுடன் இந்த ஓட்டல் எனக்கு கை கொடுத்தது. வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு, ஞாயிறுகளில் காலை சிற்றுண்டிக்கு என அவ்வப்போது அத்திப்பள்ளி போய் பார்சல் வாங்கி வருவேன். மற்ற ஓட்டல் போலல்லாமல், அங்கேயே சாப்பிட்டாலும் சரி, பார்சல் வாங்கினாலும் சரி, கவுண்டரில் போய் வேண்டியதை கேட்டால், சாப்பிட என்றால் தட்டில் வைத்து கொடுப்பார்கள். டேபிளில் நின்று சாப்பிட்டுக்கொள்ளலாம். (self service). பார்சல் என்றால் பொட்டலம் போட்டு கொடுப்பார்கள். வெளியே வரும்போது கல்லாவில் சொல்ல வேண்டும், என்ன சாப்பிட்டோம், இல்லை என்ன பார்சல் என்று. அவர் வாயிலேயே கணக்குப் போட்டு சொல்லுவார். அவ்வளவுதான். டோக்கன் முதலில் வாங்குவதோ, பணம் போட்டு பில் வாங்கி பார்சல் வாங்குவதோ கிடையாது. எனக்கு இது முதலில் விநோதமாய் இருந்தது. ஆனால், அங்கு வரும் வாடிக்கையாளருக்கு சாதாரணமாய் இருந்தது. நானும் அவ்வாறே பழகிக் கொண்டேன். 

இன்று அப்படித்தான் நான் தட்டை இட்லி, பூரி மட்டும் பார்சல் கேட்டு, அதை மட்டும் சொல்லி பணம் கொடுத்து வாங்கி வந்திருந்தேன். இங்கு வந்து பார்த்தால் தான் கேசரி பொட்டலம் கூடுதலாய் வந்திருந்தது தெரிந்தது. நான் இத்தனையும் யோசிப்பதற்குள் என் மனைவியும், மகனும் அவர்கள் உணர்வை வெளிப்படுத்தினர். பின்னர் அவர்களுக்கு நான் விளக்கியதும், "அட.. ஓசி கேசரி .. சூப்பர்!" என்றான் என் மகன். "நமக்கு எத்தனை வாட்டி சட்னி சாம்பார் மறந்துருப்பான்.. இருக்கட்டும்!" என்றாள் என் மனைவி. 

"காசு கொடுக்காம சாப்பிட்டா, அவங்களா கொடுக்காம சாப்பிட்டா உடம்புல ஒட்டாதுப்பா.." என்றார் என் அம்மா. இப்போது அந்த கேசரியை என்ன செய்வதெனத் தெரியவில்லை. நாங்கள் மூவரும் அதைப் பார்க்க, திறந்து வைத்திருந்த கேசரி சிரித்தது. "சரி விடு.. செக்யூரிட்டிக்கு வேணா கொடுத்திரலாம் .. நம்ம சாப்பிட வேணாம் !" என நான் சொல்ல என் மகன் விக்கித்துப் போனான். என் அம்மா, " யாரோ பொருளை நம்ம தானம் செய்ய படாதுப்பா..!" எனக்கு கோபம் வந்தது.. "அட சும்மா இரும்மா நீ..! ஒரு கேசரிக்கு போய்ட்டு..! நீ சாப்பூடிரா" என்றேன் என் பையனிடம். அவன் அவ்வளவுதான். "எனக்கெல்லாம் வேணாம் பா.. ஆச்சி சொல்லிட்டாங்க.." என்றான். 

"சரி.. அதை அப்புறம் பாக்கலாம்.. மத்ததை சாப்பிடுங்க..!" என்றேன். "அப்ப அதை என்ன பண்டறது.. அதை நடுவில வச்சுக்கிட்டா சாப்பிடறது..?"  என்றாள் என் மனைவி. "தூக்கியும் போட முடியாது, யாருக்கும் கொடுக்கவும் கூடாது ! என்னதான் பண்றது..?" என்றேன் பரிதாபமாய். பசி ஒரு பக்கம்.. அவ்வளவு தூரம் போய் வாங்கி வந்த களைப்பு மறு பக்கம் எனக்கு. மழை வேறு விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. 

"ஒண்ணு பண்ணுபா .. வீணாக்க வேணாம்.. இப்ப சாப்பிட்டு, அப்புறமா போய் காசை கொடுத்துடு.. விவரம் சொல்லி..!" என்றார் என் அம்மா.அது நியாயம் எனப் பட்டது எனக்கு.  நமக்கும் உறுத்தல் இருக்காது என்று என் பையனை எடுத்துக் கொள்ள சொன்னேன். என் மனைவி அதை எல்லோருக்கும் பங்கிட்டாள். நாலு பேருக்கும் அது என்னவோ பிரசாதம் போலிருந்தது. 

சாப்பிட்டு முடித்ததும் என் அம்மா, "மறக்காம போய் காச கொடுத்திடுப்பா .. சாப்பிட்டாச்சு வேற..!" என்றார். என் பையனும், மனைவியும் சிரிக்க எனக்கோ முதல்ல போய் காசை  கொடுத்திடலாம் என கிளம்ப எத்தனிக்கையில் நினைவு வந்தது. அந்த ஓட்டல் ஞாயிறு காலை பதினொரு மணி வரை மட்டும்தான். அதன் பின் விடுமுறை. இனி கிளம்பி போக முடியாது, மழை வேறு பெய்து கொண்டிருந்தது. நாளை கொடுத்து விடலாம் என எண்ணியபடி  இருந்து விட்டேன். 

திங்கள் கிழமையும் வந்தது. மாலை வீடு திரும்பியதும் என் அம்மா கேட்கும்போதுதான் நினைவு வந்தது. "கேசரிக்கு காசு கொடுத்திட்டியப்பா..!" "ஆ.ங்.. கொடுத்தாச்சு..!" என்று பொய் சொன்னேன். இல்லையென்றால் மீண்டும் ஆரம்பித்து விடுவார். என் மனைவி என்னைப் பார்த்து என் அம்மா பேசுவது போல், "பொய் சொல்ற வாய்க்கு போஜனை கிடைக்காதுப்பா..!" என்றாள் நக்கலாக.  

அந்த வாரம் ஓடியேப்போனது! மீண்டும் ஞாயிறு! இரவு முழுவதும் நல்ல மழை. கரண்ட் வேறு இல்லை. என் மனைவியும், மகனும் தூங்கிக் கொண்டிருந்தனர்  என் அம்மாவிடம் மட்டும் சொல்லிக்கொண்டு டிபன் வாங்க கிளம்பினேன். 

பார்சல் வாங்கிக்கொண்டு, வாங்காத கேசரிக்கும் சேர்த்து கணக்கு சொன்னேன். அந்த காசைக் கொடுத்தவுடன் ஒரு பாரமே இறங்கியது போலிருந்தது. முன்னருக்கு இப்போது சற்று பழக்கமாயிருந்தார் அந்த ஓட்டல் முதலாளி. கூட்டம் சற்று குறைவாய் இருந்தது. அவரிடம் பேச்சு கொடுத்தேன்,  ஏன் டோக்கன் சிஸ்டம் இல்லை.. எப்படி நம்பி கொடுக்கிறீர்கள் எனக் கேட்டேன். என்னை அதிசயமாய்ப் பார்த்து "நீங்கள் கேள்விப் பட்டதில்லையா எங்கள் ஒட்டலைபபற்றி..? என சிரித்தபடி, "யாரும் பசிக்காக பரிதவிக்க வேண்டியதில்லை.. பசிக்காக யார் வேண்டுமானாலும் இங்கு வந்து சாப்பிடலாம். அதனால்தான் இந்த டோக்கன் சிஸ்டம் லாம் என் அப்பா வைக்க கூடாது என்று சொல்லி விட்டார். நேராக போய் சாப்பிட்டு சங்கோஜமே படாமல் போய் விடலாம். காசு கொடுக்க விருப்பம் உள்ளவர்கள் மட்டும் கொடுக்கலாம்...!" என்று ஆச்சரியப் படுத்தினார். இத்தனைக்கும் அங்கே உணவு அத்தனை அருமையாய் இருக்கும். 

கூட்டம் வர ஆரம்பித்தது. சரி கிளம்பலாம் மழை வருமுன் என நினைத்தப்படி,"எப்படி இந்த விலைவாசியில், இத்தனை வருஷமாய் சாத்தியமாயிற்று..?" எனக் கேட்டேன். "இப்போ சமீபமா கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு.. நிறைய வசதியானவங்க கூட தெரிஞ்சுகிக்கிட்டு, காசு கொடுக்காம போறாங்க.." என அலட்டிக்கொள்ளாமல் சொல்ல, ".. அட.. கொடுமையே.. அப்புறமும் ஏங்க ..?" என முடிக்குமுன் என்னை உற்றுப் பார்த்தபடி "மழை பெய்யணுமில்லை..!" என புன்னகைத்தார் பெரிதாய். 


வெளியே மழை பெய்யத் தொடங்கியது!


-----------------------------

Tuesday, March 14, 2023

ராஜ குரு

வழக்கமாய் கேட்கப்படும் கேள்வி. காலம் காலமாய் நாம் சிறுவர்களாயிருந்தபோதும் கேட்கப்பட்ட கேள்வி, இப்போதும் கேட்கப்படும் கேள்வி. " நீ என்னவாகப் போகிறாய்..?, What is your ambition?" 

நாங்கள் படிக்கும்போதும் கேட்கப்பட்டது. ஒவ்வொரு வகுப்பு தேர்ச்சி பெற்று செல்லும்போதும் ஆசிரியர்களால் கேட்கப்படுவது. வீட்டு விருந்தினர்களாலும் கேட்கப்படுவது. மாறாமல், பெரும்பாலும் டாக்டர் என்றே வரும். நான் எப்போதும் டாக்டர் தான். என் அண்ணன் இஞ்சீனியர் என்பான். பொருள் புரிந்து சொன்னனா எனத் தெரியாது. ஆனால், சொன்ன மாதிரி ஆகியும் விட்டான். இன்னொரு அண்ணன் ஆபீசர் என்றான். இப்போது அரசு உயரதிகாரியாய் உள்ளான். டாக்டர் என்று சொன்ன நான்தான் மருத்துவ பிரதிநிதியாய்ப் போனேன். "மெடிக்கல் ரெப்பும் டாக்டர் மாதிரிதான், எல்லா வியாதிக்கும் மாத்திரை தெரியும், எங்க வீட்டு டாக்டர்..!" என்று சொந்தக்காரர்களிடம் என் அம்மா என்னைப் பற்றி சொல்லும்போது, "எது..!" என்ற வடிவேல் மீமதான் நினைவிற்கு வரும். 


சுமார் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் அதே கேள்வி கேட்கப்பட்டது. என் அப்பா மத்திய அரசு பணியில் இருந்தார். மூன்று ஆண்டுகள் ஒரே ஊரில் இருப்பது பெரிய ஆச்சரியம். ஒவ்வொரு கோடை விடுமுறையின் போதும் அடுத்து எந்த ஊரோ என என் அம்மா கவலையோடிருப்பார். விழுப்புரதிலுருந்து ராஜபாளையம் மாற்றலாகியது. என் அண்ணனை நாடார் பள்ளியிலும், என்னை அன்னப்பராஜா பள்ளியிலும் சேர்த்துவிட்டார் எங்கள் அப்பா. எப்போதுமே நாங்கள் இருவருமே ஒரே பள்ளியில் படித்ததில்லை. வேறு வேறு பள்ளிகள்தான். என் அம்மா கூட கேட்பார்கள், என் அப்பா அது நல்லாயிருக்காது வேணாம் என்பார். இத்தனைக்கும் என் அப்பா, பெரியப்பா சித்தப்பா என ஐந்து பேரும் சின்ன வயதில் ஒரே பள்ளியில் படித்தவர்கள். அவர் என்ன அனுபவித்தாரோ தெரியவில்லை. 


நான் சேர்ந்த பள்ளியில் பெரும்பாலும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து மாணவர்கள் படிக்க வந்தனர். என் அப்பா என்னை வகுப்பில் விட்டு செல்லும்போது மொத்த பள்ளியும் பார்த்தது. பேண்ட் ஷர்ட் கூலிங் கிளாஸ் என்று அவர் ஒரு ஜேம்ஸ் பாண்ட் போலிருப்பார். வெள்ளை சட்டை, நீல அரை கால் டிரவுசர். சுமார் நாற்பது மாணவர்கள், பெரிய வகுப்பறை. பெரும்பாலும் காட்டன் சீருடையிலிருந்தனர். அப்போது டெர்ரி காட்டன் என்பது பெரிய வசதியானவர்கள் அணிவது. வெகு சில மாணவர்களே அணிந்திருந்தனர். அதில் நானும் ஒருவன். முதல் பெஞ்சில் போய் அமர்ந்தேன். என் அப்பாவிடம் பேசிவிட்டு உள்ளே வந்த ஆசிரியர் என்னிடம், " இவ்வளவு உயரமா இருந்துக்கிட்டு முன்னாடி உட்கார்ர.. போய் கடைசியில உக்காறு.." என்றார். கடைசி பெஞ்சா என திகைத்துப் போனேன். அவர் சொல்லி முடிக்கவும் ஒரு பொடியன் முதல் பெஞ்சிலிருந்து எழுந்து என்னிடம் வந்து " என் பெயர் மாரிமுத்து, கிளாஸ் லீடர் !" என்றபடி வகுப்பிற்கு முன் நின்று ஒரு நோட்டம் பார்த்தான். "கருப்பையா, ராஜகுரு உங்களுக்கு இடையில இடம் கொடுங்க நம்ம வகுப்பு புது மாணவருக்கு.. " என்னைப்பார்த்து "உன் இடத்திற்கு போய் உன்னை வகுப்பிற்கு அறிமுகப் படுத்திக்கொள்..!" என்றான். வகுப்பு ஆசிரியரோ உட்கார்ந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். வகுப்பு மொத்தமும் அமைதியாயிருந்தது. மூன்று பேர் அமரும் மரத்திலான டெஸ்க் அது. கடைசி வரிசையில் நடுவில் இருந்தது. இருவரும் எழுந்து கொள்ள நான் நடுவில் போய் நின்றேன். மொத்த வகுப்பும் என்னைப்பார்த்தது. எனக்கு இதெல்லாம் புதிது. அப்போதுதான் கவனித்தேன் வகுப்பின் இடது முதல் வரிசையில் ஆறு பெண்கள் அமர்ந்திருந்தனர் தூக்கி வாரிப்போட்டது. இது கோ எஜுகேஷன் ஸ்கூல் லா.. என்று. 

" உன்னைப்பற்றி சொல்.. " என்றான் மாரிமுத்து. "my name is sivasankar.. my father name is..subrmanian.. i am 13 years old..i studied in villupuram.." என மனப்பாடம் வெளிவந்தது. முதல் நாள் என் அக்கா சொல்லிக்கொடுத்தது. "ஸ்கூல் எச் எம் கேட்டா சொல்லு அப்பதான் சேத்துக்குவாங்க.." என்று பயிற்சி கொடுத்திருந்தாள். நான் சொல்லி முடிக்கவும் மொத்த வகுப்பும் கை தட்டியது. பெருமை தாங்கவில்லை எனக்கு. தலையை நிமிர்த்தாமலேயே வகுப்பாசிரியர், "மாரியம்மா, புரிந்ததா? எனக் கேட்க.. மாரியம்மா எழுந்து நின்றாள். தாவணி அணிந்திருந்த ஒரே பெண் ஆறு மாணவிகளில். பேசாமல் நிற்க, " கனக சபாபதி .." என்றார். ஒரு மூலையில் எழுந்து நின்றான். என்னைப் பார்த்து சிரித்த ஆசிரியர், "மாரிமுத்து நீயே வகுப்புக்கு சொல்லிடு.." என்றார். நான் சொல்லியதை அப்படியே தமிழில் சொன்னான் மாரிமுத்து. இப்போதும் கை தட்டியது வகுப்பு. ஆனால், இது எனக்கல்லா எனப் புரிந்து கொண்டேன். 

மற்றபடி சிரிப்போ வேறு பேச்சோ இல்லை வகுப்பில். ஆசிரியர், " அப்புறமாய் ஒவ்வொருவரும் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.. என்றவர் " இன்று முதல் வகுப்பு இன்னும் டைம் டேபிள் வரவில்லை" என்றபடி ambition என்ற வார்த்தையை கரும்பலகையில் எழுதினார். எத்தனைப் பேருக்கு இந்த வார்த்தை, இதன் அர்த்தம் தெரியும் எனக் கேட்க சொற்ப கைகள் தூக்கியிருந்தது. 'நோக்கம், குறிக்கோள் லட்சியம் என ஒவ்வொருவராய் சொல்ல என் முறை வந்தது. "my ambition is to become a doctor' என சொல்ல ஆசிரியர் வெரி குட் என்றார். எனக்கோ பெருமை தாள வில்லை. என் அக்காவை நன்றியுடன் நினத்துக் கொண்டேன். 

விளக்கம் அளித்து, ஆசிரியர் ஒவ்வொருவரிடமும் அவரவர் ambition பற்றி கூறி கேட்க பெரும்பாலும் விவசாயம் என்றனர். (பின்னாளில் தெரிந்து கொண்டேன் அவர்கள் விவசாயம் பார்த்துக்கொண்டே பள்ளியில் படித்தனர் என்று). டாக்டர் போலீஸ் கலெக்டர் என சொல்ல டாக்டர் என சொன்னவர்களை என்னைப்பார்த்து காப்பி அடித்துவிட்டனர் என பொருமிக்கொண்டேன். பெண்கள் அனைவரும் ஒன்றும் சொல்லவில்லை. ஒரே சிரிப்பு அவர்களுக்கு. ஆரோக்கிய மேரி மட்டும் தான் பைலட் ஆகப் போகிறேன் என சொல்ல ஆசிரியர், "சபாஷ்" என்றார். மற்ற பெண்கள் அப்படியென்றால் என கேட்க மேரி விளக்க ஆரம்பித்தாள் அவர்களுக்கு. 

எல்லோரும் முடித்தபின் ஆசிரியர், "ஒருவருக்கு கூட டீச்சர் ஆகணும்னு ஆசை இல்லயா.. ஏன்?" என்றார். "அதுக்கு நிறைய படிக்கணும்.. எல்லா கேள்விக்கும் பதில் தெரியணும்.." என ஒரே மாதிரி சொல்ல சிரிப்பலை எழுந்தது. 

ஆசிரியர், "ராஜகுரு.. உனக்கு கூட உங்கப்பா மாதிரி வாத்தியார் ஆகணும்னு ஆசை இல்லயாப்பா.." எனக் கேட்க என் பக்கத்தில் அமர்ந்திருந்த ராஜகுரு எழுந்து நின்றான். அப்போதுதான் அவனை முழுதாய்ப் பார்த்தேன். கரு கருவென உயரமாய் எண்ணைப் படிய வாரிய தலை, லேசாய் மீசை துளிர் விட்டிருந்தது. சாந்தமான முகம். "ஓ இவன் அப்பா வாத்தியாரா..?" என நினைத்துக்கொண்டேன். 

அவன் சொன்ன பதில் தான் இப்போது இதை எழுதத் தோன்றியது. 

"என்னால் அதை இப்போது தீர்மானிக்க முடியாது ஐயா.. (அங்கே ஆசிரியர்கள் ஐயா என்றே அழைக்கப் பட வேண்டும்) நான் முயற்சி செய்து பார்க்கிறேன்.. அது ஆசைப் பட வேண்டிய வேலை அல்ல. சொல்லப் போனால் அது வேலையே அல்ல. அதற்கும் மேலே. மிக பொறுப்பு வாய்ந்த செயல். ஒரு ஆசிரியருக்கு மிகப் பெரும் பொறுப்புள்ளது. ஒரு சமுதாயத்தில் ஆசிரியர் எப்படியோ, மற்றவரும் அப்படியே.. நம் சமுதாயத்தின் முற்போக்கு சிந்தனையாளர் அவர். அவரை அவரின் செயலை சமூகம் கூர்ந்து கவனிக்கும்.ஏனெனில், அவர் வழியை தான் சமூகம் பின் தொடரும்.  ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் பொதுவானவர். தப்பிழைக்கும் எவரையும் கண்டிக்க, திருத்த அனுமதியுண்டு. அவர் மற்றவர்களுக்கு முன் மாதிரியாய்த் திகழவேண்டும். தெரியாமல் கூட அவர் தப்பிழைத்து விடக்கூடாது. அது மிகப் பெரிய பாதிப்பை மட்டுமல்ல, ஒட்டு மொத்த ஆசிரிய சமுதாயத்தின் மீது களங்கத்தை உண்டு பண்ணும்... அதனால் தான் நான் தயங்க வேண்டியுள்ளது ஐயா.. !" என நிறுத்த "இன்னும் நீ தவறு இழைப்பாய் என எண்ணுகிறாயா.. இந்த வயதிலும் உனக்கு பக்குவம் வரவில்லயா..?" என அவனை கூர்ந்து பார்த்தபடி ஆசிரியர் கேட்க, " இல்லை அய்யா.. நான் மற்றவர்களை காட்டிலும் என் நடத்தையில் கூடுதல் கவனமாயிருக்கிறேன்.. என்னை எல்லோருக்கும் ஆசிரியரின் பையன் என்று தெரியும். நான் செய்யும் சிறு தவறு கூட என் அப்பாவை, அவரது பணியை அவமானப்படுத்திவிடும். நான் தெரியாமல் தவறிழைக்க வாய்ப்புள்ளது. அதற்கு இன்னமும் நான் என்னை செதுக்க வேண்டியுள்ளது. அதற்கு முழு தகுதியை என் மனம் எப்போது உணர்கிறதோ அப்போதே ஆசிரியப் பணிக்கு நான் என்னைத் தயார்ப் படுத்திக்கொள்வேன். அது எனது கனவும் கூட..! " என்று சொல்ல மொத்த வகுப்பும் வியந்து பார்த்தது. ஆசிரியரோ ஏதும் சொல்லாமல் முகத்தில் ஒரு புன்னகை மட்டும் தவழ விட்டார். 


அன்று மாலை பள்ளி முடிந்து செல்கையில் கவனித்தேன். என் வகுப்பாசிரியர் சைக்கிள் ஓட்ட பின்னால் ராஜகுரு உட்கார்ந்தபடி என்னைப்பார்த்து கையசைத்து சென்றான். 

------------------

பின்குறிப்பு: சமீப காலமாய் ஆசிரிய-மாணவ செய்திகள் மிக வேதனை அளிக்கிறது. அடிக்கடி ராஜகுருவை நினைத்துக்கொள்வேன், அத்தகைய செய்திகளை கடக்கையில். 

Monday, January 9, 2023

மை நேம் இஸ் மிஸ்டர் வெங்கடேஷ்..!

"சார், உங்க ஆபிஸ்ல ஏதாவது வேலை இருக்குமா.. நம்ம ஊர் பையன் ஒருத்தன் பக்கத்து ஜெராக்ஸ் கடையில வேலைக்கு இருக்கான். வயசு முப்பது ஆவப்போகுது.. நல்ல வேலை கிடைச்ச பிறகுதான் கல்யாணம் பண்ணுவேன்னு  நிக்கிறான். அவன் அப்பா நேத்து வந்தவரு இந்த விபரம் சொல்லிட்டு போனாரு.. நமக்கும் சொந்தம் தான். நல்ல பையன் சார்..!" என்றார். நான் தினமும் அலுவலகம் செல்லும் முன் பேருந்தை விட்டு இறங்கிய பின் ஒரு தேநீர் குடித்துவிட்டு போவது வழக்கம். அந்த கடைக்காரர் தான் கேட்டது.

சரியான நேரம் என நினைத்துக் கொண்டேன். எங்கள் அலுவலக உதவியாளர் ஒரு வாரம் முன்பு தான் ஏதோ விபத்தில் அடிபட்டு நடக்க முடியாமல் இருந்தார். தற்காலிகமாக அவர் குணமாகும் வரை ஒருவர் தேவையாயிருந்தது. " சரி, வர சொல்லுங்கள் ..பார்க்கலாம் !" என்றேன்.

நான் அலுவலகம் போய் அரை மணி நேரத்திற்குள் இருவருமே வந்திருந்தனர்.பார்க்க நல்ல பையனாய் தெரிந்தான். குட்டையான கருந்தேகம். கோரை முடி. மீசை இல்லாததால் பார்க்க முப்பது வயது போல் தெரியவில்லை. ஊர் தருமபுரி பக்கம். தமிழ், கன்னடம், தெலுங்கு என பேச தெரியும் என்றார் டீ கடைக்காரர். அவன் என்னைப் பார்ப்பதும் தலையை குனிவதுமாயிருந்தான். பேர் கேட்டேன். " மை நேம் இஸ் மிஸ்டர் வெங்கடேஷ் சார்..!" என்றான். என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. " மிஸ்டர் வெங்கடேஷ், ஜெராக்ஸ், பைலிங் அப்புறம் கொரியர் போஸ்ட் ஆபிஸ் ன்னு வேலை இருக்கும். டெம்பரரி தான் இப்பதைக்கு ..அப்புறம் பார்க்கலாம்.."  என்றபடி நான் சம்பளத்தை சொன்னவுடன் இருவருமே எதிர்பார்க்கவில்லை. ஜெராக்ஸ் கடையில் கொடுப்பதை விட மிக அதிகமாயிருக்கும் போல. அவர்கள் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி. 


அடுத்த நாள் கடைக்காரர், "ரொம்ப தேங்க்ஸ் சார்..நேத்து போன் பண்ணி அவங்க அப்பாட்ட சொன்னேன்..ரொம்ப சந்தோசப்பட்டாரு.. உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன சார்..இவனுக்கு அக்கா பொண்ண தான் கல்யாணம் பேசி வச்சிருக்கு..இவன் ஊருல விவசாயம் பார்க்க மாட்டேன்னு இங்க வந்துட்டான்..அதும் மூணு நாலு வருஷமாச்சு.. இந்த பயலுக்கு அம்மா இல்லை..அப்பன் மட்டும்தான்..அக்காளுக்கு புருஷன் தவறிட்டான்..ஒத்த பொண்ணு அவளுக்கு..நீங்க வேலை கொடுத்து அவங்க எல்லார் வாழ்க்கையிலும் விளக்கேத்திட்டிங்க.." என்றார் சினிமா பாணியில். நான் சிரித்து கொண்டே "அப்படியெல்லாம் இல்லீங்க..எல்லாம் கடவுள் செயல்..!" என்றேன். அவர் கடையில் மாட்டியிருந்த சாமி படத்தை பார்த்தபடி கும்பிட்டு கொண்டார். நமக்கு சாதாரணமாய் தெரியும் சில செயல்கள் மற்றவர்களுக்கு எவ்வளவு பெரிதாயிருக்கிறது என வியந்து கொண்டேன்.


அந்த பழைய உதவியாளர் வரவேயில்லை. வெங்கடேஷ், வெங்கியாகி எல்லாருக்கும் பிடித்த நபராகிப்போனான். ஒரு நாள் அந்த டீக்கடை காரர் ஒரு பெரியவர் மற்றும் ஒரு பெண்மணியோட அலுவலகத்திற்கு வந்தார். அவர்களைப்பார்க்கவும் வெங்கி வெளியே போய்விட்டான். வந்தவர்கள் தட்டு பழம் பத்திரிகை என எடுத்து வைக்க எனக்கு புரிந்து போனது. " சார் நம்ம வெங்கடேசுக்கு கல்யாணம்..என சொல்ல நான் மகிழ்ந்தேன். அந்த பெண்மணி, "நான் அவன் அக்கா சார்..என் பொண்ணைதான் கட்டி கொடுக்கிறேன். நீங்க அவசியம் வரணும்..நீங்க மட்டும் அவனுக்கு வேல கொடுக்கலன்னா..இன்னும் அவன் சம்மதித்திருக்க மாட்டான்..குடும்பத்தோட வாங்க அய்யா..!" என்றார் பெரியவரும். வெங்கியை காணாது, டீக்கடை காரரிடம் "வெங்கிக்கு தெரியும்ல..அவனுக்கு சம்மதம் தானே" என்றேன் மெதுவாய். அவர் சிரித்தபடி, "அவன் வெட்கப்பட்டு வெளியே போய்ட்டான் சார்..இதுக்குத்தான் அவன் பல வருஷமா காத்து கிடக்கான். அவனுக்கு அக்கா பொண்ணு மேல உசிரு சார்..!" என்றார்.


மொத்த அலுவலகமே அவன் கல்யாணத்திற்கு போனோம். கிராமத்து கோயிலில் எளிமையாயிருந்தது. வெங்கிக்கு அப்படியொரு சந்தோசம். கிளம்புகையில், அவன் அப்பாவும், அக்காவும் எங்கள் வேனில் மூடை மூடையாய் காய்கறி, கடலை, கேழ்வரகு, பழம் என அடுக்கினர். அலுவலகத்தினர் திக்கு முக்காடி போயினர் அவர்கள் அன்பில்.


வெங்கி மனைவியுடன் புதுக்குடித்தனம் வந்தாயிற்று. ஒரு நாள் என் வீட்டிற்க்கு சாப்பிட அழைத்திருந்தேன். அவன் மனைவி சின்ன பெண் பிளஸ் டூ படித்திருந்தாள். கிராமத்திற்கே உரிய வெள்ளந்திதனம். அவனை விட வயது மிக குறைவு என்பது என் மனைவி சொல்லித்தான் தெரிந்தது. இருந்த ஒரு மணி நேரத்தில் தன் மனைவியை, "மஞ்சு, மஞ்சு..!" என ஏதேதோ தெலுங்கில் சொல்லியபடி இருந்தான். எங்களிடம் பேசியதை விட அவன் அவளிடம் பேசியதுதான் அதிகம்.


கொஞ்ச நாளில், வெங்கி மனைவி பக்கத்து வீட்டில் யாரோ சொல்லி அருகிலுள்ள கார்மெண்ட்ஸ் கம்பெனிக்கு வேலைக்கு போக ஆரம்பித்தாள். என்னிடம் வெங்கி சொன்னபோது அதற்குள் எதற்கு அவசரம் என்றேன். "இல்லை  சார்..மஞ்சுக்கு வேலைக்கு போணும் னு ஆசை..கேட்டுச்சு..சரின்னுட்டேன்" என்றான். மனைவியிடம் இருந்து போன் வந்தால் போதும் பார்க்கிற வேலையை அப்படியே போட்டு விடுவான். மனைவி மீது பித்தாயிருந்தான். எல்லாம் ஒரு குழந்தை பிறந்தால் சரியாகிவிடும் என நினைத்துக்கொண்டேன்.


ஒரு வருடம் ஓடிப்போனது.  பெண் குழந்தை பிறந்தது. வெங்கிக்கு அப்படியொரு மகிழ்ச்சி. பிரசவத்திற்கு கூட ஊருக்குப் போகவில்லை. இங்கே அவன் அக்கா வந்திருந்து கவனித்துக்கொண்டார்.குழந்தையைப் பார்க்க போனபோது அவன் அக்காவிடம் கேட்டே விட்டேன். "தலை பிரசவம் ஊரில் பார்க்கலயா..?" என்றதற்கு, "சொன்னா  கேட்கமாட்டேங்குறான் சார்..!" என்றார். அவனோ, "மஞ்சு சொல்லிருச்சு சார்..ஊருக்கு வேணாம்னு ..அதான்.." என்று சிரித்தான். இவன் இன்னும் மஞ்சு மோகத்திலேயே இருக்கிறான் என சிரித்து கொண்டேன்.


சில மாதங்கள் சென்றிருக்கும். ஒரு ஞாயிறு சந்தையில் காய்கறி வாங்கி வரும்போது ஒரு ஸ்கூட்டி அருகில் வந்து, "ஹாய் அங்கிள்..!" என்றவாறு ஒரு பெண் சிரித்தாள். யாரென்று நான் யோசிப்பதை பார்த்து விட்டு, "மஞ்சு அங்கிள்..!" என்றாள்  அடையாளமே தெரியவில்லை. டீ ஷர்ட் ஜீன்ஸ் என மாறியிருந்தாள். "குழந்தை..வெங்கி.." என்று இழுத்தேன். "வீட்ல இருக்காங்க..நான் பிரண்ட்ஸ் கூட ஷாப்பிங் வந்தேன்..பை அங்கிள்.." என்றாள். ஆளே மாறிப்போயிருந்தாள் 

உண்மையிலே அவள் சுபாவம் அப்படியா, இல்லை மாறி விட்டாளா என நினைத்தபடி நடந்தேன். வரும்போது டீக்கடை காரரைப் பார்க்க நேரிட்டது. "அவன் தான் சார் குழந்தையை பாத்துக்கிறான்..அவ இன்னும் சின்ன புள்ளையாட்டம் திரியுறா..அவன் அக்காக்கும் வயசாயிடுச்சு..நடக்க முடியல..இவன் ஒரு வார்த்தை சொல்லமாட்டிக்குறான்..திரும்ப அந்த கார்மண்ட்ஸ் வேலைக்கு போறேன்னு சொல்றா..இந்த லூசு பயலும்..சரி மஞ்சு..நான் பாப்பாவை பாத்துகிறென்றான்..பால்குடி மாறாத குழந்தையை வச்சுக்கிட்டு..இவன் செய்யிறது சரியில்லை..நீங்க கொஞ்சம் சொல்லுங்க சார்.." என்றார். என் மனைவியிடம் சொன்னபோது, "நானும் ரெண்டு மூணு வாட்டி பார்த்தேங்க..ஒரு பையனோட..சொந்தகார பையனோ யாருனு  தெரியல..வந்ததுக்கு மஞ்சு ஆளு மாறிடுச்சு..வெங்கி அப்படியேதான் இருக்கான்" என்றாள். அவள் சொன்னதில் சற்று வெறுப்பு தெரிந்தது.


குழந்தையின் முதல் பிறந்த நாளுக்கு அழைத்திருந்தான். ஆடம்பரம் தெரிந்தது. நிறைய புது புது ஆட்கள் தென்பட்டனர். வெங்கியிடமே கேட்டேன். " மஞ்சு பிரண்ட்ஸ் சார்..கார்மண்ட்ஸ்ல கூட வேலை பார்க்கிறவங்க ..!" என்றான். அதிலும் நிறைய ஆண்கள், சில ஜோடிகள் வேறு என பார்க்கவே எனக்கு பிடிக்கவில்லை. ஆண் நண்பர்கள் சாதாரணமாய், "மஞ்சு, மஞ்சு ..!" என பேர் சொல்லி அழைப்பதும் செல்பி எடுப்பதுமாயிருந்தனர். குழந்தையோ ஒரே அழுகை. வெங்கிதான் தூக்கி வைத்துக்கொண்டு வேலையையும் பார்த்துக்கொண்டிருந்தான். கொஞ்ச நேரத்தில் கேக் வெட்ட வந்த அவன் மனைவியை பார்த்து ஆடிப்போனேன். அப்படியொரு ஆடை அணிந்திருந்தாள். என்னால் இருக்க முடியவில்லை. அழும் குழந்தை கையில் பரிசை கொடுக்கவும் மனசு வரவில்லை. வெங்கியிடம் சொல்லிவிட்டு கிளம்பினேன். வீட்டின் வெளியே சாமியானா போட்டு சாப்பாடு ஏற்பாடு பண்ணியிருந்தனர். பீர் பாட்டில் அடுக்கி வைத்திருந்தனர். என்னால் நம்பவே முடியவில்லை. வெங்கியை கேட்டேவிட்டேன். மஞ்சு பிரண்ட்ஸுக்கு சார் என்றான் சாதாரணமாய். மஞ்சு மிக பிசியாய் தன் நண்பர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டிருந்தாள். நகர வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக அவளை கபளீகரம் செய்துகொண்டிருந்தது.


வெங்கியிடம் எந்த மாற்றமோ, வருத்தமோ தெரியவில்லை. அவன் எப்பவும் போல இருந்தான். என்ன இப்போது மஞ்சுவுடன் குழந்தை புராணமும் சேர்ந்து கொண்டது. ஒருநாள், கேட்டேவிட்டேன். "ஏன் வெங்கி, உனக்கு கஷ்டமாயில்லையா..மஞ்சு அவசியம் வேலைக்கு போகணுமா..குழந்தய பார்த்துக்கலாமில்ல..?" என்றேன். " மஞ்சுக்கு  வேலைக்கு போனும்னு ஆசை சார்..அதுக்கு என்ன ஆசையோ அது செய்யட்டும்..குழந்தையை நான் பார்த்துகிறேன்.." என்றான் சிரித்தபடி. அவன் சொல்வதிலோ, சிரித்ததிலோ எந்த போலித்தனமும் இல்லை என்பது கண் கூடாய்த்தெரிந்தது.


அவன் அக்காவும் ஊருக்கு போனபின், குழந்தையை அலுவலக கிரீச் அழைத்து வர ஆரம்பித்தான். எனக்கு விநோதமாயிருந்தது அவன் செயல். வேலை நடுநடுவே போய் பார்த்துக்கொண்டிருந்தான். அவனுக்காகவே நாங்கள் அலுவலகத்தில் வேலைகளை 'அட்ஜஸ்ட்' செய்து கொண்டிருந்தோம். ஒரு நாள், அலுவலகத்தில் என்னுடன் பணியாற்றும் பெண்மணி ஏதோ அவனை கடிந்து கொண்டிருந்தார். அவர் சற்று மூத்தவர். அவரும், வெங்கியும் அக்கா தம்பி போல. இருவரும் தெலுங்கில் பேசிக்கொள்வர். அன்றைக்கு அவர் பேசியதிலிருந்து எனக்கு புரிந்தது, "நீ வேலைய பாரு..உன் பொண்டாட்டி புள்ளய பாக்கட்டும்..நீ அடிக்கடி புள்ளய பாக்க போனா யாரு வேலை பார்க்கிறது.." என்க, "என்னை, என் வேலைய பேசுங்க ..என் மஞ்சுவ பத்தி சொல்லாதீங்க..அக்கா"  என்றான் சிரித்துக்கொண்டே., அவன் குழந்தையை பார்க்க போனபோது, அவர் என்னிடம் வந்தார்.


"சார், அவன் எனக்கு தம்பி மாதிரி.." என்று ஆரம்பித்தவுடன் தெரியும் என்பது போல் ஆமோதித்தேன். " அந்த பொண்ணு சரியில்லை சார்..இவன் தலையில தூக்கி வச்சு ஆடுறான்..இவன் ஒரு அப்பிராணி சார்..அவ போடுற ஸ்டேட்டஸ் பாருங்க..குமட்டுது.." என்றபடி தன் போனில் சில படங்களை காட்டினார். மஞ்சு சினிமா பாணியில் ஆடையணிந்து உடன் சில ஆண்களுடன் விதவிதமாய் இருந்தாள். "சாரி சார்..இன்னும் இருக்கு..அதெல்லாம் உங்ககிட்ட காட்ட முடியாது.." என்று தலை குனிந்தபடி, "கண்ணு முன்னாடி இப்படி நடக்கிறப்ப..சும்மா இருக்க முடியல சார்.." என்றார். எனக்கு என்ன செய்வது இதை எப்படி தீர்ப்பது என புரியவில்லை. 


அந்த வாரமே வெங்கியை வீட்டிற்கு அழைத்து பேசினேன். அவனை மட்டும் வர சொன்னேன். வரும்போது குழந்தையை தூக்கி வந்திருந்தான். "மஞ்சு பிரண்ட்ஸ் கூட சினிமாக்கு போகுது..அதான்..!" என்றான் சிரித்தபடி. எனக்கு ஆத்திரமாய் வந்தது. "நீ என்ன கிறுக்கனா..உனக்கு என்ன நடக்குதுன்னு நிஜமாவே தெரியலியா ..எந்த ஒரு ஆம்பளையும் இப்படி பொட்டயா இருக்க மாட்டான். கண்ணு முன்னாடி கண்டவனோட சுத்துறா..புள்ளய கூட பார்க்க முடியாம..த்தூ ..!" நான் கத்துவதைப்பார்த்து உள்ளிருந்த என் மனைவி வெளியே வந்து சமாதானப்படுத்தினாள். அவன் தலையை குனிந்து உட்கார்ந்திருந்தான். குழந்தை அழ ஆரம்பித்தது. குழந்தையை தூக்கிக்கொண்டு என் மனைவி உள்ளே சென்றாள். நான் போனைப் பார்த்தபடியே இருந்தேன். எனக்கு பிபி ஏறிப்போனது. குழந்தை நீண்ட நேரம் அழவும் என் மனைவி அவன் அருகே இறக்கி விட்டாள். அது சிரித்தபடி போய் அவனை கட்டிக்கொண்டது. அவன் தூக்கிக்கொண்டு ஒன்றும் சொல்லாமல் கிளம்பி சென்றான்.


அடுத்த நாள் ஏதும் நடக்காதது போல் அலுவலகம் வந்தான். எப்போதும் போல் எல்லோரிடமும் இருந்தான். நான் அவனிடம் அன்று முழுவதும் பேசவே இல்லை. அன்று மாலையே அந்த டீக்கடை காரரை சந்திக்க சென்றேன். அவரிடம் அத்தனையும் சொன்னேன். அவரோ தலையை குனிந்தபடி, "அந்த கருமத்தை எப்படி சார் சொல்வேன்..அந்த சிறுக்கி எவன்கூடவோ போய்ட்டா..போன வாரம் அவள காணோம் ..போனும் எடுக்கிலன்னு இவன் இங்க வந்து நின்னான். எனக்கு பதறிப்போச்சு..அவ வேல பார்க்கிற கார்மெண்ட்ஸ் கம்பெனிக்கு போய் கேட்டோம். இவன் புள்ளய வச்சுட்டு இருக்கிறத பார்த்துட்டு அங்கிருந்த செக்யூரிட்டி யாரு இவருன்னு என்கிட்டே கேட்க, அவ புருஷனும், குழந்தையும் னு சொன்னேன். அவ்வளவுதான்.." என்னை உள்ளே கூப்பிட்டு விசாரிச்சார்..புண்ணியத்துக்கு தமிழ் காரர், மதுரை பக்கம்..அவரு சொன்னதை கேட்டு ஈரக்குலையே நடுங்கி போச்சு..இவ இன்னும் கல்யாணம் ஆகலை..லோக்கல்ன்னு சொல்லிருக்கா..போதாக்குறைக்கு அங்க வேலை பார்க்கிற ஒருத்தன்கூட ஒன்னா தங்கியிருக்கா..ன்னு சொன்னாரு. இது இங்க நடக்கிறதுதான்..இதுக்குன்னே இங்க திரியிறானுக..புள்ளய ஊருக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ கூட்டிட்டு போயிருங்க..னு கும்பிடு போட்டாரு..!" 

"வெளியே வந்தா, அவ நிக்கிறா..என்னைப்பாக்காத மாதிரி அவன்கிட்ட 'இங்க ஏன் வந்த மாமா..போ முதல்ல..நா பிரண்டு ரூம்ல இருக்கேன்..தேடாதே..ன்னுட்டு ஒரு நாதரியோட பைக்ல ஏறி போய்ட்டா சார்..குழந்தை கைய நீட்டி அழுவுது..அத என்னன்னு கூட பார்க்கல..இந்த கேனப்பய குழந்தையை சமாதானப் படுத்துறான்..! நா கெட்டவார்த்தையில் அவனை திட்டி..காறி துப்பிட்டு வந்தேன்.. என்ன சார் கண்ணு முன்னாடி எவன்கூடவோ போறா..புள்ளய கூட பார்க்கமா.. வெட்டி வீச வேணாமா..தூ.." என்றார். கண்ணில் நீர் தளும்பியது..கோபத்தில் சிவந்திருந்தார். எனக்கு தூக்கி வாரிப்போட்டது அவர் சொல்லியதை கேட்டு.


ஒரு நாள் டீக்கடை காரர் அலுவலத்திற்கு வெளியே நின்றிருந்தார். வெங்கி அப்போது வெளியே சென்றிருந்தான். நான்தான் அவரை அழைத்து கேட்டேன், வெங்கியை பார்க்க வந்தீர்களா  என்று. "இல்ல சார் உங்ககிட்ட பேசணும்னு வந்தேன். இங்க வந்தப்புறம் சங்கடமா இருக்கு..உங்கள தொந்தரவு பண்றதுக்கு..!" என்றார். பரவாயில்லை, வாங்க என்று உள்ளே வரச்சொன்னேன். "கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் மேல ஆவப்போவுது..இவன் ஊருக்கு போயி..அந்த சனியனும் யாருக்கும் போன் பேசறதில்லை போல..இவன் போன் பேசறப்ப பொய்ய சொல்லி சமாளிக்கிறான் போல..இன்னிக்கு அவங்க அப்பனும், அக்காளும் கிளம்பி இங்க அவன்  வீட்டுக்கே போய்ட்டாங்க..இவன்தான் வீட்டை மாத்தி போய்ட்டானே ..அது தெரியாம தேடி அலைஞ்சுட்டு கடைசியில நம்ம கடைக்கு வந்து உக்காந்திருக்காங்க..நான் அவசர வேலை இருக்குன்னு உங்களை பார்க்க வந்துட்டேன்..நான் என்னத்த சொல்ல சார் அவங்க கிட்டே..அவங்களை பார்க்கிறப்ப எனக்கு அழுகையே வந்துடுச்சு சார்..!" என்று அழுதே விட்டார்."என்னை நம்பி விட்டுட்டு போனாங்க சார்.. இன்னிக்கு இவன ரெண்டுல ஒண்ணு முடிவு பண்ணப்போறேன் சார்..!" என்றார் பல்லை கடித்தபடி. அவர் சொல்லி முடிக்கவும் வெங்கி சரியாய் உள்ளே வந்தான். அவன் சற்றும் இங்கே அவரை எதிர்பார்க்கவில்லை என்பது முகத்தில் தெரிந்தது.


"என்ன மாமா இந்த நேரத்தில..இங்க..கடைக்கு போகல..?" என்றான் அவரை பார்த்தபடி. "நீதான் போயேன்..போய் உன் அப்பனுக்கும், அக்காளுக்கும் டீ போட்டு கொடு.." என்றவர், "புள்ள எங்கடா..? அதையாவது உன்கிட்டே வச்சுருக்கியா..?" என்றது எனக்கே சுருக்கென்றிருந்தது. அவரைப்பார்த்தவன் தலையை குனிந்துகொண்டான். "அங்க ஒருத்தி அவ புள்ளயத் தேடி வந்திருக்கா..என்ன சொல்ல..? அவ புருஷன் ஒரு பொண்டுக பைய..அவ ஒரு தே..டியா ..ஊர் மேய எவன் கூட இருக்களோ ன்னு சொல்லவா..?" என்று சொல்லி முடிக்கவில்லை. வெங்கி சடாரென்று அவர் காலில் விழுந்து, "அப்படி உங்க வாயால சொல்லாதீங்க மாமா.." என அழ ஆரம்பித்து விட்டான். நான் அவர் அப்படிய பேசியதற்கு கோபப்பட்டு அவரை அடிக்க பாய்வான் என நினைத்தேன். "எப்படியாவது சமாளிச்சு அவங்களை ஊருக்கு அனுப்பிடுங்க மாமா..வேறொண்ணும் சொல்லிடாத ..உன் கால பிடிச்சு கேக்குறேன்..!" என அழ, அவர் தலையில் அடித்தபடி  "நான் வர்றேன் சார்..!" என்று கிளம்பி போய்விட்டார்.


நான் எதுவும் பேசாதது, கேட்காதது அவனை ஏதோ செய்திருக்கும் போல. குனிந்த தலை நிமிராமல் அவனாகவே, "சார்..எங்கம்மா..நான் பிறந்தப்பவே செத்துடுச்சு..அக்காதான் சார் எனக்கு எல்லாம்..பாவம் அது புருஷன், சொந்த மாமாதான் மஞ்சு பிறந்த கொஞ்ச நாள்ல செத்து போனாரு..என் மேல என் அக்கா காட்டின பாசத்தை விட அது பொண்ணு மேல நான் அவ்வளவு பாசம் வச்சுருக்கேன் சார்..விபரம் தெரியிறப்ப இருந்தே எனக்கும் அவளுக்கும் தான் கல்யாணமுன்னு சொல்லிட்டே இருக்கும்..எங்கக்கா. மஞ்சுவ நல்ல வசதியா வாழ வைக்கணும்னு நான் ஊரை விட்டு வேலை தேடி இங்கே வந்தேன்..நல்ல வேலை கிடைச்சு..சம்பாரிக்க ஆரம்பிச்சப்புறம்தான் கல்யாணம்னு இருந்தேன். கல்யாணம் முடிஞ்ச அன்னிக்கு எனக்கு புரிஞ்சு போச்சு சார்..எனக்கும் மஞ்சுக்கும் செட் ஆகாதுன்னு..எனக்கு அது மேல அவ்வளவு ஆசை..ஆனா, அது பாசம்னு புரிஞ்சிக்கிட்டேன்..ஒரு புருஷனா அதை நெருங்கவே முடியல..தூக்கி வளர்த்த பிள்ளைல சார்.. மஞ்சுக்கு வேற மாதிரி சார்..இங்க வந்த கொஞ்ச நாளிலேயே அது ரூட்டு மாறிடுச்சு..என்னால அது சொல்றது..செய்யிறது எதையும் தட்ட முடியல..அது தப்பு பண்ணுதுன்னு கூட கண்டிக்க முடியல..அது ஆசையை தடுக்க முடியல..பாசம் என் கண்ணை மறைச்சிடுச்சு..உங்ககிட்ட மட்டும் சொல்றேன் ..சத்தியமா வேற யாருக்கும் தெரியவே கூடாது சார்.." என்றவன் கேவி அழ ஆரம்பித்துவிட்டான். "..என் குழந்தையே என்னுது இல்ல சார்.." என்று தலையில் மடார் மடார் என அடித்துக்கொண்டான். எனக்கு தலையே சுற்றியது. இவன் என்ன பேசுகிறான் என நினைக்கும்போதே, "எனக்கு தெரியாதா சார்..வந்த கொஞ்ச நாளிலேயே அது சீர் கெட்டு போச்சு..எந்த பாவியோடயோ படுத்து வயித்தில புள்ள வாங்கி வந்தா சார்..இஷ்டப்பட்டுதான் படுத்தாளோ இல்ல எவனும் ஏமாத்தி ஏத்திட்டானோ தெரியல.. அவ ஏதும் சொல்லல..நானும் இதுவரை கேக்கலை..நான் மாசமாயிருக்கேன் மாமா ன்னு சொன்னா..அப்பகூட எனக்கு வாய் வரல..நானும் சந்தோசமா இருக்கிற மாதிரி நடிச்சேன்..அதான் டெலிவரிக்கு கூட ஊருக்கு கூட்டிட்டு போகாம இங்கயே பார்த்தேன்.. நா மஞ்சு மேல வச்சிருக்கிற பாசத்தை விட பாப்பா மேல வச்சுருக்கேன்..அது மஞ்சுவோட குழந்தை சார்..என் உசுருக்கு மேல உசுரு..! என்றவன் சற்று ஆசுவாசப் படுத்திகொண்டு என் காலை பிடித்துக்கொண்டான். " ..நா மானம் கெட்டவனு நீங்க நினைச்சாலும் சரி சார்.. என் மஞ்சு ஆசைப்பட்ட மாதிரி வாழட்டும்..நா அதுக்குனே இருப்பேன்..அதுவரை என் குழந்தை போதும் எனக்கு..!" என்றபடி தலைக்கு மேல்  கும்பிட்டபடி போனவன்தான் வரவேயில்லை. தலை கிறுகிறுத்து போனது எனக்கு.

அதன்பின் டீ கடைக்கும் நான் போகவே இல்லை. அந்தப்பக்கம் போக நேரிடும்போது கவனித்தேன்.டீ கடைக்காரரும் கடையில் தென்படவில்லை.ஒரு நாள் கடை வேறு பெயர் பலகையோடிருந்தது. விசாரித்ததில் கடையை அவர் கை மாற்றிவிட்டார் என்று சொன்னார்கள். வெங்கி போன் நம்பர் என்னிடம் இருந்தது. ஏனோ எனக்கு அழைக்க வேண்டும் எனத் தோன்றவே இல்லை. அலுவலகத்தில் அவன் போனை எடுக்கவில்லை என பேசிக்கொண்டனர். வெங்கி போய் இரண்டு உதவியாளர்கள் வந்து போய்விட்டனர். யாரும் நிலைக்கவில்லை.

அவ்வப்போது என் மனைவிதான் வெங்கியைப் பற்றி கேட்பாள். நான் அவளிடம் எதுவும் சொல்லவே இல்லை. அவன் ஊருக்கே சென்று விட்டதாக சொல்லியிருந்தேன் அவளிடம். 

ஆறு வருடங்கள் ஓடிப்போனது.

இன்று புத்தாண்டு. என் மனைவி, வாட்ஸ் அப்பில் ஒவ்வொரு தொடர்பாய் தேடித்தேடி வாழ்த்து அனுப்பிக்கொண்டிருந்தாள். அந்தந்த தொடர்பில் உள்ள படங்களை (DP)  பார்த்தபடி வர, வெங்கி பெயரும் வந்தது. அதிலிருந்த படத்தை பார்தவள்,  "நம்ம வெங்கியை பாருங்க..ஸ்மார்ட்  போன் வாங்கிட்டான் போல..அடேயப்பா..பாப்பா எப்படி வளர்ந்துருச்சு..மஞ்சுவ  காணோம்..அப்பாவும் மகளுமா செல்பி எடுத்திருக்குங்க.." " என்றபடி என்னிடம் காட்டினாள். 

படத்தில் வெங்கி சிரித்தபடி நிற்க  கூட அவன் இடுப்புயரம் மகள் நின்று கொண்டிருந்தாள்.  படத்தை பெரிதுபடுத்தி பார்த்துவிட்டு "பொண்ணு மஞ்சு ஜாடை இல்ல..அவன மாதிரியாங்க இருக்கு..?! என கேட்டாள். நான் கவனியாதது போல என் போனில் மூழ்கிப்போனேன்.

===========================