Thursday, April 2, 2020

வாழ்வின் விளிம்பில்..!

சாவதை விட வாழ்வதுதான் இங்கு பரிதாபமாக உள்ளது..!

கொரோனா ..கோராத்தாண்டவமாடுகிறது எங்கு நோக்கினும்.

எதேச்சேயாக பெங்களூரிலிருந்து அம்மாவை பார்க்க மதுரை வர, மறு நாள் ஊரடங்கு.அதைத்  தொடர்ந்து அனைத்து போக்குவரத்தும் முடங்க மதுரையே கதியாகிப்போனது.

ஊரடங்கின் இரண்டாம் நாளே மக்கள் விதியை  காற்றில் பறக்க விட காவல் துறையினர் ஆங்காங்கே சாலையில் திரிவோரிடம் கடுமையாய் நடக்க ஆரம்பித்தனர். பாதிப்பை உணராத மக்கள் ஒரு புறம் டூ வீலரில் சுற்ற, அவர்களால் அத்தியாவசிய தேவைகளுக்கு போய் வருவோர் பெரும் இன்னலுக்கு உள்ளானர். இதில் குறிப்பாய் பாதிப்படைந்தோர் அன்றாட வியாபாரிகள் தான்.


காய், பழம், பொரி கடலை, நொறுக்கு தீனி, ஊறுகாய், பினாயில், கோலப்பொடி, அப்பளம் விற்போர், பழைய பேப்பர் வாங்குவோர் என எண்ணற்றோர் ஒருபுறம். சில தெருக்களில் (சில வீடுகளுக்கென) தினசரி பிச்சை எடுப்போர் என உண்டு. இன்னும் சொல்லப்போனால், எங்கள் பக்கத்து வீட்டிற்கென ஒரு சில நாய்கள், பூனை வருவதுண்டு.

ஒட்டு மொத்தமாய் ஒருவரையும் காணோம். இப்படியொரு முடக்கத்தை வாழ்வில் கண்டதில்லை. உலகமும் கண்டிராது.

நான்கு நாட்கள்தான், தெருவில் கோலப்பொடி விற்கும் பெண்ணின் குரல் கேட்க ஆரம்பித்தது. எலி வளையிலிருந்து எட்டிப்பார்ப்பது போல் ஒவ்வொரு தலையாய் ஒவ்வொரு வீட்டிலிருந்து தென் பட ஆரம்பித்தது. எங்கள் வீட்டிற்கு வந்த பெண்ணிடம் என் அம்மா நலம் விசாரிக்க ஆரம்பித்தார். அப்பெண் அழாத குறையாய் கொட்டி தீர்த்தார். வீட்டில் பிள்ளைகள் பசியோடிருப்பதாகவும், பதினோரு கி.மீ நடந்தே வருவதாகவும் சொன்னார். தேவைக்கு அதிகமாகவே வாங்கிய என் அம்மா ஒரு நூறு ரூபாய் வைத்துக்கொள்ளவும் கொடுத்தார்கள். வாங்க மறுத்த அவரிடம், "சரி, பார்த்து போ..எங்கே பார்த்தாலும் கோரனோ , கோரனோ ன்னு சொல்றாங்க..கவனமா இரு. வீட்டிலேயே இருக்க பாரு " என்றார் என் அம்மா.

"அட போங்கம்மா..செத்தா சாவுறோம்..செத்துரக்கூடாதுன்னுதான் வாழறோம்..இப்ப  சாவுறது கூட பெரிசா தெரியல...வாழ்றது தான் மா கஷ்டமா இருக்கு ..!" என்றபடி கோலப்பொடி என கூவிக்கொண்டே நடக்க ஆரம்பித்தார்.