Wednesday, October 7, 2020

சத்தமில்லாமல் ஓர் யுத்தம்..!

சமீப காலமாகத்தான் ஒன்றை உணர்கிறேன். இந்த ஸ்மார்ட் போன் வந்தபின், (வாட்ஸ அப் பும் ஒட்டிப்பிறந்த இரட்டையராய் வந்துவிடுகிறது) அதீதமான மதம் சாதி சார்ந்த பதிவுகள், கருத்துக்கள் அதிலும் 'மீம்' எனும் பெயரில் நம்மிடம் வந்துகொண்டே இருக்கின்றன. நாம் விரும்புகிறோமோ, இல்லையோ அவைகள் நம் கவனத்தில் இடம் பெறுகின்றன. எப்படியும் அழிக்கத்தான் போகிறோம், இருந்தாலும் நம் பார்வையில் தொடர்ந்து நாளாக, நாளாக ஆக்கிரமிக்க ஆரம்பிக்கின்றன. இது மறுக்க முடியாத உண்மை.

என் பள்ளிப்பருவத்தில் யாரும், யாரையும் மதம், சாதி நோக்கில் அறிந்தது இல்லை, பழகியதும் இல்லை. அதை ஒரு பொருட்டாகக்கூட எண்ணியதில்லை. இன்னும் சொல்லப்போனால், பிறமதத்தை உயர்வாக எண்ணினோம். அடுத்த மதப்பண்டிகையை உற்சாகமாய் கொண்டாடினோம். அப்துல்லா, நாசர், சலீம், முகம்மது கனியாயிருக்கட்டும், டேவிட், அந்தோணி, வெஸ்லியாயிருக்கட்டும். யாராயிருந்தாலும், பள்ளி, கல்லூரி நாட்களிலிருந்து நட்பென்பது இன்னும் தொடர்ந்து கொண்டேதானிருக்கிறது. ஆனால், இப்போது சமீப காலமாய் ஏதோ ஒரு திரை எங்களுக்குள் இருப்பது போல உணர்கிறேன். முன்பிருந்த அந்த அன்னியோன்யம் இல்லாமலிருப்பதை உணர முடிகின்றது. நகைச்சுவை எனும் பெயரில் ஏதாவது 'மீம்' ஒன்றை (மதம், கட்சி சார்ந்த) யாரவது பகிர அதற்கு எந்தவிதமான சலனமுமின்றி ஒரு நிசப்தம் நிலவுவதை நன்றாகவே உணரமுடிகின்றது.

பிறந்து இத்தனை வருடங்களில், நமக்கு நாம் யார் என்பதை, பகிரும் 'மீம்' கள்தான் அடையாளம் காட்டுகின்றன. "நீ இந்து இல்லை, தமிழன்.. நாம் திராவிடர்கள்..அவர்கள் ஆரியர்கள்..சங்கீஸ்..மங்கீஸ்.." என ஏதெதோ பிதற்றுதலை சகிக்கமுடியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் உண்மை. இத்தகைய பதிவுகள், அது நகைச்சுவையோ, தகவலோ அது நம்மையறியாமல் உள்ளே சென்று உட்கார்ந்துக்கொள்கிறது. 'தேவைப்படும்போது' நம்மை மத, சாதி, கட்சி, இன ரீதியாகப் பிரிக்கத்தூண்டுகிறது. அதுவும், இப்போதுள்ள இளைய சமுதாயத்திடையே இது நன்றாய் வேரூன்ற ஆரம்பித்துவிட்டது.  இது நிதர்சனம்!

தேவர்மகனில் கமல் குறிப்பிட்டதுப்போல, நம் எல்லோருக்குள்ளும் அந்த மிருகம் தூங்கிக்கொண்டுதானிருக்கிறது. இத்தகைய இரைகள் அதை எழுப்பிவிடுகின்றன. 


Friday, October 2, 2020

பித்ரு தோஷம்

அமாவாசையன்று விரதமிருந்து ஒரு வேளை மட்டுமே உணவருந்துவது என் பழக்கம். அதுவும், காக்கைக்கு படையலிட்டு உண்பேன். இது பல வருடங்களாக நான் கடைப்பிடிக்கும் பழக்கம். இப்பொதெல்லாம், நகர்ப்புறங்களில் காக்கைகள் அருகி வருகின்றன. என்னைப்போல் அமாவாசை விரதமிருப்போருக்கு காகங்கள் என்பது பித்ருக்கள். அவைகள் வந்து நம் படையலை எடுப்பது நம் முன்னோர்கள் வந்து நாம் படைத்த உணவை உண்பதாக ஐதீகம், நம்பிக்கை. சமயங்களில், காக்கைகள் வரும் முன்பே அணில் வந்து உண்ண ஆரம்பிக்கும். அதனால், என் அம்மா கூடுதலாகவே வைப்பார். ஆனாலும், காக்கை வந்து எடுத்தால்தான் அவருக்கு திருப்தி. காக்கை வந்து உண்ணாமல், சாப்பிட மாட்டார். இதுவரை தாமதமாக வேண்டுமானால் வந்திருக்கிறது. வராமல் இருந்ததில்லை.


நான், தினசரி மாடியில் சாதம் வைத்து பழக்கியிருந்தேன். அதனால், காக்கைக்குப் பஞ்சமில்லை. அன்றைய அமாவசைப்பொழுதில், ஏனோ காக்கைகள் வருவதற்கான அறிகுறியேத் தென்படவில்லை. வழக்கத்திற்கு மாறாய் தாமதமாகவே, என் மகன் மாடிக்கு வந்துவிட்டான். அவனும் பசியிலிருந்திருக்க வேண்டும். "ஏன்பா..இன்னுமா இதெல்லாம் நம்பிட்டுருக்க..வச்சுட்டேன்னா வாயேன்.." என்றான். எனக்குத்தான் உறுத்தலாயிருந்தது. "இன்னும் கொஞ்ச நேரம்டா..வரும்ம்.." என்று, "கா..கா" என குரல் எழுப்பினேன். காக்கா வந்தபாடில்லை. நான் அவனைப்பார்க்க, அவன் என்னைப்பார்த்து சிரித்தான். "சரி, வா சாப்பிடலாம்" என எத்தனிக்கையில், எங்கிருந்தோ ஒரு காகம் வந்தமர்ந்தது. "தாத்தா வந்தாச்சு" என்று சிரித்தான். இன்னும் ஒரு சில காக்கைகள் வந்து உண்ண ஆரம்ப்பித்தன. எனக்குப் பரம திருப்தி. "என்னப்பா..சின்ன தாத்தா, பெரிய தாத்தா எல்லாரும் வந்துட்டாங்க போல" என்று கேலியாய் சிரித்தான். இருவரும் கீழிறங்கி வீட்டிற்கு சாப்பிடப்போனோம்.

====

சில வருடங்களுக்கு முன், இராமேஸ்வரம் சென்றிருந்தேன். மே தினத்தையொட்டி விடுமுறையாதலால் சரியான கூட்டம். எங்குமே அறைகள் கிடைக்காமல், அங்கிருந்த சங்கர மடத்தில் தங்க நேரிட்டது. அருகிலேயே, ஒரு வெளியில் நிறையப் பேர் தர்ப்பணம் கொடுத்துக்கொண்டிருந்தனர். தர்ப்பணம் முடிய, ஐயர்கள் பிண்டத்தை காக்கைக்குப் படையலிட சொல்லிக்கொண்டிருந்தனர். ஒவ்வொருவரும், அங்கிருந்த கிணற்றடியில், மரத்தடியில் என பிண்டத்தை வைக்க, காக்கைகள் வந்து கொத்தித்தின்றன. அவர்கள் அனைவர் முகங்களிலும் அப்படியொரு திருப்தி. ஐயரும், "ஒன்னும் குறையில்லை..பித்ருக்கள் எடுத்துண்டா" என கூறிக்கொண்டிருந்தனர். 


வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்த நான், அப்போதுதான் அந்த முதிய தம்பதியைக் கவனித்தேன். சற்று அதிகமானத் தட்டுகளோடு, பெரியளவில் தர்ப்பணம் செய்துக்கொண்டிருந்தனர். பார்க்க வசதியானவர்கள் போலிருந்தது. இருவர் முகமும் இறுகிப்போயிருந்தது. ஐயர் ஏதாவது கேட்க, அந்தம்மா எடுத்துத்தர சற்று தாமதமானாலும், அந்த பெரியவர் அப்படி முறைத்தார் அந்தம்மாவை. இறுதியாய் ஐயர், பிண்டத்தை இலையில் வைத்து பெரியவரிடம் கொடுத்து வைத்துவிட்டு வரச்சொன்னார். கிணற்றடியில் இலையை பவ்யமாக வைத்து விட்டு கும்பிட்டபடி அருகிலேயே நின்று கொண்டார். நானும் பார்த்துக்கொண்டேயிருந்தேன். ஐயர் அருகிலேயே நின்ற அந்தம்மாவும், அங்கிருந்தபடியே பார்த்துக்கொண்டிருந்தார். ஐயர் மும்மரமாய் சாமன்களை, பைகளில் எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்.


அவர் வைத்த பிண்டம் அருகில் சில காக்கைகள் மெதுவாய் வந்தன. தலையை சாய்த்துப்பார்த்தன. ஆனால், எடுக்கவில்லை. அந்த இடத்தில் அத்தனை காக்கை கூட்டமிருந்தது. எனக்கு ஆச்சர்யமும், ஆவலுமானது. இங்கே நின்று கொண்டிருந்த அந்தம்மா வாயில் சேலை தலைப்பை வைத்து அழ ஆரம்பித்து விட்டார். அவர் அழுவதைப்பார்த்துதான் ஐயரே என்னவென்று திரும்பிப்பார்த்தார். அந்த காக்கைகள் பிண்டத்தைத்தொடவேயில்லை. பிண்டத்தைப்பார்க்கவும், அவரைப்பார்க்கவுமாயிருந்தன. அவர் கும்பிட்ட கையை இறக்கவேயில்லை.  சில நொடிகள்தான், காக்கைகள் அந்த இடத்தை விட்டு அகன்றன. எனக்குப் புதிராயிருந்தது. அவ்வளவுதான். ஆவேசமாய் வந்த அந்த பெரியவர், அந்தம்மாவை முதுகிலும், கன்னத்திலுமாய் அடி, அடியென அடித்தார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. அந்தம்மா அப்படியே உட்கார்ந்து அழ ஆரம்பித்துவிட்டார். "மகா பாவம்டி..நீ பண்ண கொடுமை..!" என்று அந்த இடத்தை விட்டு அந்த பெரியவர் வேகமாய் போய்விட்டார். "தினமும் தீபம் ஏத்தி கும்பிட்டு சமாதனப்படுத்துங்கோ..எல்லாம் சரியாயிடும்..கவலைப்படாதீங்கோ"என்று கிளம்பினார் ஐயரும். கொஞ்ச நேரம் அங்கிருந்தோர் அங்கு நடப்பதை வேடிக்கைப்பார்த்தனர். அப்புறம், சற்று நேரத்தில் அந்த இடம் வெறிச்சோடிப்போனது. நானும், ரொம்ப நேரம் நின்று பார்த்தேன். அந்தம்மா நகர்வதாய் தெரியவில்லை. எனக்கு ஏனோ அந்தம்மா மீது பரிதாபமாயிருந்தது. வெயில் ஏறிக்கொண்டேப்போனது. நானும் கிளம்பி கோயிலுக்குப் போய்விட்டேன். 


மாலையில் எனக்கு இரயில். மடத்திலிருந்து கிளம்புகையில் ஆவல் தூண்ட, அந்த இடத்தைப் பார்வையிட்டேன். அந்தம்மாவை அங்கு காணவில்லை. அந்த இடம் முழுவதும் இலைகளும், சிதறிய பருக்கைகளுமாய் காட்சியளித்தன. ஆனால், அந்த கிணற்றடியில் அந்த பிண்டம் மட்டும் அப்படியே இருந்தது.


Friday, July 17, 2020

அண்ணன், தம்பிகள்

இந்த கொரனொ கால கட்டத்தில், பழைய நண்பர்களுடன் தொடர்பு கிடைப்பது ஒரு நல்ல விஷயம். எப்படியாவது, யார் மூலமாகவோ பழைய தொடர்புகள் புதுப்பிக்கப்படுகிறது. இப்போதெல்லாம், எல்லோருக்குமே பழைய கதைகள் பேச, நினைவுகளை பகிர என நேரம் உள்ளது.

அப்படித்தான், எனது, பழைய நண்பன், கல்லூரித்தோழனின் தொடர்பும் கிடைத்தது. இருவருமே மிகுந்த உற்சாகமடைந்தோம், பேச, பேச குடும்பம், வேலை, ஆசிரியர்கள் என. அப்போதுதான், அவன் அப்பாவின் நினைவு வந்தது. அவர்கள் நல்ல வசதியான குடும்பம். ஆனால், வீட்டிலோ ஒரு வாகனமும் கிடையாது. அவர்கள் வசதிக்கு காரே வைத்துக்கொள்ளலாம். அவர் எப்போதும் ஆட்டோவில்தான் போய் வருவார். பின்னர், கல்லூரி வந்தபின் என் நண்பனும் சரி, அவன் அண்ணனுக்கும் இரு சக்கர வாகனம் ஏதுமில்லை. ஆனால், என் நண்பனுக்கோ கொள்ளைப் பிரியம் இரு சக்கர வாகனங்கள் மீது. அவன் அண்ணன் எத்தனையோ முறை அவன் அப்பாவிடம் சண்டையெல்லாம் போட்டதாய் சொல்லுவான். அவன் அப்பா முடியவே முடியாது என்பாராம். ஆனால், மகன்கள் வண்டி ஓட்டுவதைப் பற்றி எதுவும் சொல்ல மாட்டாராம். சொல்லப்போனால், சமயங்களில் தெருவில் மகன்கள் யார் வண்டியாவது ஓட்டி செல்கையில் ரசிப்பாராம். நாங்கள், அவரை சரியான கஞ்சன் என நினைத்துக்கொள்வோம்.

எதேச்சையாய் அவன் அப்பாப் பற்றி பேசுகையில், இந்த வண்டி விஷயமெல்லாம் நினைவில் வந்தது. நான் கேட்கவும், சிரித்துக்கொண்டே சொன்னான். "அவர் கடைசி வரை வண்டியே வாங்கிக்கொள்ளவில்லை, எங்களையும் வாங்கிக்கொள்ள அனுமதிக்கவேயில்லை. இதனால், என் அண்ணனுக்கும் அவருக்கும் பெரிய சண்டையே வந்து அவன் தனிக்குடித்தனம் போய்விட்டான். அப்பாவும் சமீபத்தில் இறந்துப்போனார்."

"சாவின்போதுதான் எங்கள் அத்தை, அப்பாவின் தங்கையை நீண்ட வருடங்களுக்குப் பிறகு பார்த்தோம். அவருக்கும் எங்களுக்கும் அப்படி ஒன்றும் தொடர்பில்லை. ஏதோ உறவுப்பகை என்று அம்மா சொல்லுவார்கள். கல்யாணத்திலும், சாவிலும் தான் உறவு பகையாகும், பகை உறவாகும் என்று சொல்லுவார்கள். அப்படி, என் அப்பா இறப்பில், அத்தை உறவு எங்களுக்கு மீண்டும் மலர்ந்தது. அவர்தான் பழைய கதைகள் நிறைய சொன்னார். அப்பாவைப்பற்றி அவர் சொன்ன விஷயங்கள் எங்களுக்கு நிறைய ஆச்சரியங்களைத் தந்தது."

"என் அப்பாவிற்கு ஒன்று விட்ட அண்ணன் ஒருவர் உண்டு. என் பெரியப்பா முறை. என் அப்பாவும், சித்தப்பாவும் (என் அப்பாவின் உடன் பிறப்பு) சின்னதிலேயே அம்மா, அப்பா இல்லாமல் அனாதையாயிருக்க அவர்தான் எடுத்து வளர்த்திருக்கிறார். அவர் ஓரளவு வசதி படைத்தவர் போல, அந்த காலத்திலேயே. தான் எது வாங்கினாலும், தம்பிகளுக்கும் சேர்த்துதான் வாங்குவாராம். அத்தனை பாசம். ஒரு பவுண்டைன் பேனா வாங்கினால் கூட மூன்றாய்த்தான் வாங்குவாராம். வளர, வளர..இது போல் நிறைய. மடக்கு சேர், இரும்பு கட்டில், சைக்கிள், மோதிரம், செயின் என எல்லாமே அவருக்கு வாங்கும்போது இரண்டு தம்பிகளுக்கும் சேர்த்து."

"ஊரில் உள்ளோர் கேலியாய் கேட்பார்களாம்..நாளைக்கு கல்யாணம் னா கூட அதுவும் சேர்த்துதானாப்பா..? என்று. ஆமா, கல்யாணம் மட்டுமில்லை..நான் வீடு கார் வாங்கும்போது என் தம்பிகளுக்கும் சேர்த்துதான் வாங்குவேன்..என் தம்பிகளுக்கு செய்ய முடியலைன்னா..எனக்கும் கிடையாது..என்பாராம். 

அப்புறம், அத்தையை (அப்பாவின் தங்கை) கல்யாணம் பண்ணிக்கொடுப்பதற்காக ஏதோ நிர்ப்பந்ததில் (பொண்ணு கொடுத்து, பொண்ணு எடுக்க) அவரும் கல்யாணம் செய்திருக்கிறார். ஆனால், அவர் எண்ணம் தம்பிகளுக்கும் சேர்த்து, தனக்கு வயதானாலும் பின்னாடி கல்யாணம் பண்ணிக்கொள்ளலாம் ன்னு இருந்திருக்கு. அதற்கப்பறம் விதி விளையாடிருக்கிறது. ஏதோ பங்காளி, செய்முறைன்னு பெரிய, நிறைய பிரச்னையாயி அவர் நொடித்துப்போயிட்டாராம். அப்பா இறக்கிறதற்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடித் தான் அவரும் இறந்தாரு..அவர் கேதத்துக்குப்போயிட்டு வந்தப்பின்னாடிதான், அப்பாவும் முடியாமப்போயிட்டாரு..!

சித்தப்பா தான் சொன்னாரு..அப்பாவும், சித்தப்பாவும் வைராக்கியமாவே இருந்துருக்காங்கா..நம்ம அண்ணனுக்கு முன்னாடி நம்ம காரு, வீடுன்னு எதுவும் வாங்கிக்கிட வேணாம்னு..ஏற்கனவே அனல்ல இருக்கிற அண்ணன நாம தூக்கி உலையில போடவேணாமுன்னு..!

என்ன பிரச்சனை, ஏன் பேச்சு வார்த்தை இல்லைன்னு தெரியலை..அப்பாவும் எதுவும் எங்ககிட்ட சொல்லிக்கிட்டதில்லை. ஆனா, அவங்க வாழ்ந்த வாழ்க்கையை வரலாறாக்கிட்டாங்க..அவங்களால வசதியா வாழ முடிஞ்சபோதும் தன் அண்ணனுக்காக எப்படி வாழ்ந்துருக்கான்ங்கிறத நினைக்கிறப்ப ரொம்ப பெருமையாயிருக்கு.. 

இங்க, என் அண்ணன் கார் வாங்கினா, அதை விட பெரிய காரா வாங்கணும்கிறா..என் பொண்டாட்டி..நான் முதல்ல வீடு வாங்கிட்டா அசிங்கமா போயிரும்னு என் அண்ணன் நினைக்கிறான்.. நான் ஏதாவது வாங்கிருவேன்னு அவனும், அவன் ஏதாவது வாங்கித் தொலைச்சுடுவானோன்னு பயந்துகிட்டே வாழ வேண்டியிதாயிருக்கு..கொடுமை!" என சலித்துக்கொண்டான்.


Monday, May 25, 2020

கொரோனா கோலங்கள் - உதவி

ஊரடங்கைத் தளர்த்தி ஓலா சேவைத் தொடங்கியவுடன், என் மனைவிக்கு அப்படியொரு திருப்தி. அவர் பெரும்பாலும், ஓலா ஆட்டோவினையே தெரிவு செய்வார் அவரது பயணங்களுக்கு. சிக்கனம் ஒரு புறம் இருந்தாலும், பாதுகாப்பு கருதியே அவர் இச்சேவையை தேர்ந்தெடுப்பார். பையனை டியூஷன் அனுப்பவதாகட்டும், மார்க்கெட் போவதாய் இருக்கட்டும். அதிலும், அவருக்கு வெளியூர் தனியே செல்கையில் மிக கைகொடுக்கும் என்பார். 

கடந்த இரண்டு மாதங்களாக எங்குமே செல்லவில்லை. ஓரிரு நல்லது, கெட்டது பார்க்க, விசாரிக்க வேண்டியிருந்தது. போதாக்குறைக்கு, என் பையன் இந்த ஊரடங்கில் மேலும் வளர்ந்திருந்தான். அவனுக்குத் தேவையான 'அவசிய' உடுப்புகள் வாங்க வேண்டியிருந்தது. இந்த சனி, ஞாயிறுகளில் பத்து பனிரெண்டு முறை பயணித்திருப்பார் என் மனைவி. ஒரே ஒரு நபர் மட்டும்தான் ஆட்டோவில் அனுமதி என்பதால், பெரும்பாலும் அவர் மட்டுமே தனித்தே பயணித்தார். எனக்கும் அலுவலிருந்தது. சில இடங்களுக்கு நானும் அவரும் பயணிக்க வேண்டியிருந்ததால், ஓலா கேப்பில் (இருவர் மட்டுமே அனுமதி) சென்றோம். 

காரில் ஏறி உட்கார்ந்து சில நிமிடங்களிலேயே என் மனைவி, டிரைவருடன் பேச்சு கொடுக்க ஆரம்பித்தார். பொதுப்பேச்சு தான், கொரனோவைப்பற்றி. அவ்வளவுதான்..எல்லா டிரைவர்களும் சொல்லிவைத்தார் போல் புலம்பித் தள்ள ஆரம்பித்தனர், ஒவ்வொரு பயணத்தின்போதும். "வண்டி டியூ கட்ட முடியல, வீட்டு வாடகை, சுகர் பீபி மாத்திரை செலவு, புள்ளைக படிப்பு செலவு" ..என பட்டியலிட்டு பேசுவர்.  என் மனைவியும் கவனமாக கேட்டு பொதுவான ஆறுதல் வார்த்தை கூறுவார். நான் அவ்வளவாக பேசுவதும் இல்லை, அதிலும், பயணத்தில் தவிர்ப்பேன். அது, எனது சுபாவமாகிப்போனது. 

இறங்கும்போது ஒவ்வொரு முறையும் அவராகவே "நானே கொடுத்துக்கிறேன்..என்கிட்டே சில்லறையாவே இருக்கு" என்பார். நான் கூட சொன்னேன், "பேசாம ஓலா மணியில் பே பண்ணிடு, எதுக்கு பணத்தைத் தொட்டு ரிஸ்க் இந்த கொரோனா சமயத்தில.."

"நீங்க ஓலா மணிலா பே பண்ணி அவங்க அக்கவுண்டுக்கு போய் அதை எடுக்க ஏ டி எம் போய்..ஏ டி எம் ஒர்க் ஆவணும், அப்புறம் அதுல தேவையான நோட்டு கிடைக்கணும்..இம்சைங்க..அதுக்கு கையில கொடுத்துட்டு போனா.எவ்வளவு ஈஸி.." என நியாயப்படுத்தினார்.

இரண்டு முறை என்னிடமே பணம் கேட்டு வாங்கி கொடுத்தார். என் போனுக்கு வரும் தகவல் தொகையை விட அதிகமாகவே வாங்கி கொடுத்ததை கவனித்து கேட்டேன். "ஏய், என்ன அமௌன்ட் சொல்றாங்க..என்கிட்ட கேட்டுட்டு கொடு, மீதி கொடுக்கிறமாதிரியும் தெரியல.."

"..அவங்க கரெக்ட் ட்டா தான் சொல்றாங்க..நான்தான் கூட கொடுத்தேன்." என்றார்.

"அதுக்காக நூறு ரூபாய் வரை ஜாஸ்தி கொடுப்பியா..118 ரூ பில்லுக்கு 200 ரூ கொடுக்கிற..இப்படித்தான் எல்லார்கிட்டயும் கொடுத்தியா .." என்றேன். என்னை அறியாமல் குரல் உயர்ந்திருந்தது.

"அட, இந்தமாதிரி கண்ணுக்குத் தெரிஞ்சு கஷ்டப்படுறவங்களுக்கு கொடுத்துட்டு போங்களேன்..அத விட்டு, அந்த நிவாரண நிதி, இந்த நிவாரண நிதின்னு ஆன்லைன் ல எவ்வளவோ பே பண்ணுறீங்க..அது தேவை படுறவங்களுக்கு கிடைக்குதோ இல்லியோ.. இப்படி கஷ்டப்படறவங்ககிட்ட நாம பேசுறப்ப அவங்களுக்கு ஒரு ஆறுதலாவும் இருக்கும்..ஏதோ நம்மால முடிஞ்ச எக்ஸ்ட்ரா அமௌன்ட் கொடுக்கிறப்ப அவங்களுக்கும் எதோ ஒரு உதவியாயும் இருக்கும்.." என்று சாதாரணமாக சொன்னார்.

Friday, May 22, 2020

கொரோனா கோலங்கள் - மாத்தி யோசி ..!

வீட்டின் வாயிலில் யாரோ அழைக்கும் குரல் கேட்டது. ஒரு நபர் ஐம்பது வயதிருக்கும். மாஸ்க்கை விலக்கியபடி, சினேகமாக, "சார், முடி வெட்டணுமா, கட்டிங், ஷேவிங்..!" என்றார். எனக்கு மிக புதியதாய் இருந்தது. "கொரோனாநால கடையெல்லாம் திறக்கக்கூடாது..மாசக்கணக்கா ஆச்சு..நான் இந்த எரியலாதான் கடை வச்சுருக்கன் ..நிறைய கஸ்டமருங்க இங்கதான் குடியிருக்காங்க..அதான் வீடு, வீடா விசாரிப்போம்னு.." என்று இழுத்தவர், "ரொம்ப சுத்தமா இருக்கோம் சார், டெட்டால் லாம் கொண்டு வந்துருக்கேன்" என்றார். அதற்குள், என் மாமா பேச்சு சத்தம் கேட்டு வந்தவர் அடையாளம் கண்டு கொண்டார். இருவரும் நலம் விசாரித்துக்கொண்டனர். என் மாமா அவர் கஸ்டமராம்.

வீட்டின் பின் பக்கம் ஒரு சேரைப் போட்டு, தரை ஓரமாக அவர் கொண்டு வந்திருந்த பையை விரித்து கத்திரி, சீப்பு, டெட்டால் என மினி பார்பர் ஷாப்பை உருவாக்கி விட்டார். என் மாமாவிற்கு பரம சந்தோசம். ஒரு வழியாய் இன்று முடி வெட்ட முடிந்ததென்று. கழுத்தை சுற்றி ஒரு துண்டை மாமாவிடமே வாங்கி கட்டி விட்டு ஆரம்பித்தார். கத்திரி சத்தம் கேட்டு, "எத்தனை நாளாச்சு இந்த சத்தம் கேட்டு..!" குனிந்தவாறே குதூகலித்தார் என் மாமா. "அண்ணே, உங்களுக்கே இப்படின்னா, எனக்கு எப்படி இருக்கும் சொல்லுங்க ..!" என்றார் உணர்ச்சிவசப்பட்டவராய். நான் இருவரையும் வேடிக்கை பார்த்தவாறு நின்று கொண்டிருந்தேன்.

என் மாமா, "எப்ப இருந்து வரிங்க..நா கூட போன் நம்பர் வாங்காம போய்ட்டோமேன்னு கவலைப்பட்டேன்..மூணு மாசமாச்சா..ஒரே எரிச்சல்..நல்ல வேளை  வந்தீங்க.." என்றவர் "ஆமா, உங்க மகன் இருப்பானே, அவன் எந்த ஏரியா பக்கம்  போயிருக்கான் " என்றார்.

"அவனால தான் ணே இந்த யோசனையை வந்த்துச்சு..ரெண்டு மாசமா வீட்டில உக்காந்து பார்த்தோம் , எதோ ரேஷன் அரிசி,  யார்யாரோ கொடுத்த அரிசி,  பலசரக்குன்னு சமைச்சாலும் ..மனசு ஒப்பலை..வேல வெட்டி ப்பாக்காம டெய்லி சோத்துல காய் வைக்க மனசே வரலன்னே..என் மவனை ஏதாவது காய் பழம் வாங்கியாந்து ட்ரை சைக்கிள் ல விப்போம்டா சொன்னேன் ..துரை கேக்கலை..மூணு வேலையும் தின்னுட்டு டிவி பார்த்துட்டே இருப்பான்னே..சொரணையே இல்லாம..எல்லாத்தயும் மூடுனாங்களே..இந்த டிவி யா மூடமா விட்டாங்களேண்ணே..என் மருமவ முழுகாம வேற இருக்கா..அவளும் சமைச்சு ஓஞ்சு போனான்னே.." துண்டை உதறிப்போட்டார். "அம்மா விளக்குமார கொடுங்க ..நானே கூட்டிபோட்டுர்றேன்..!" கப்பில் தண்ணீரையும் டெட்டாலையும் கலந்தார். 

"கேளுங்கண்ணே..சும்மா இருந்தாலும் பரவால்ல துரை. கடைய (டாஸ்மாக்) திறந்தானுகல..ஆரம்பிச்சுட்டண்ணே..ரெண்டு நாள் குடிச்சான், காசே இல்லையே ..பொண்டாட்டி கயித்தோடதான் இருக்கு..பொட்டுத் தங்கம் விடாம வித்து குடிச்சாச்சு..எங்க போவாரு..துரை..கடைசியில வீட்டில இருந்த அரிசியெல்லாம் கொண்டுபோய் விக்க ஆரம்பிச்சுட்டாண்ணே ..புண்ணியத்துக்கு யாரோ பை பைய கொடுத்தது..அதுவும் புள்ளத்தாச்சி வெயில்ல போய் வாங்கினு வருவா..யாரவது சொல்லுவாங்க..அங்கே யாரோ கொடுக்கிறாங்க..இங்க கொடுக்கிறாங்க ன்னு..நானும் கேப்பேன்..போதுமா, எதுக்கு இவ்வளவ சேர்த்து வைக்கன்னு, எத்தனை நாள் ஆவும்னு தெரியலையே மாமா..கடை திறந்து..வியவாராம் ஆரம்பிக்க..ன்னு சொல்லும்..அப்படி மவராசி சேர்த்து வச்ச அரிசி பைய கொண்டு போய் வித்து குடிக்க ஆரம்பிச்சுட்டாண்ணே..தங்கத்தை, காசை தெரியாம ஒளிச்சு வச்சது போய் இப்ப இந்த குடிகாரன்ட்ட இருந்து அரசிய கூடவா ஒளிச்சு வக்கிறதுன்னு என் மருமவ ஒரே அழுகைண்ணே.." இப்போது ஷேவிங்கை ஆரம்பிக்கப்போனார். ரேசரை டெட்டால் தண்ணியில் அலசியெடுத்தார். 

"நாங்களும்தான் குடிச்சோம்..இல்லேண்ணு சொல்லலண்ணே..ஆனா, இப்படி வரமுறை இல்லாம குடும்பத்த பரிதவிக்கவிட்டெல்லாம் குடிக்கலன்னே..அப்ப ஓயாம போனா கடையில இருக்கவானே திட்டுவாங்க..அதுவும் ஓனரல்லாம் வயசான ஆளா இருப்பாங்கே..திட்டுவாங்கே ..குடும்பத்தை பாருடா..பொண்டாட்டி வயிறெரிய விட்டிராத ..பெரிய பாவம்டா..அது..குடி..வேணாங்கில அளவா குடி..ன்னு தானே சொல்லுவாங்க..நமக்கே சங்கடமா இருக்கும்..அவங்க முகத்தைப்பார்க்கவே" துண்டால் ஒற்றி எடுத்தார் கன்னம், நாடியெல்லாம். 

"சண்ட போட்டு போன துரை ரெண்டு நாளா காண்கில, மருமவ திங்காம, அழுத்திட்டே இருக்கு..அதுக்கு ஒண்ணும் வாய்க்கு வாங்கி கொடுக்க கூட முடியலேண்ணே அதான் யோசனை பண்ணேன்..யார் போன் நம்பரும் தெரியாது..நம்மளும் யாருக்கும் கொடுக்கில ..ஆனா, இந்த ஏரியால தான் எல்லா பேரு வீடும் இருக்கும்..அவங்களுக்கும் தேவை இருக்கும்..வீடு வீடா கேப்போம்..போன் நம்பரும் கொடுத்து வைப்போம்..தேவைப்படுறவங்க கூப்பிடுவாங்கல்ல..ன்னுட்டு.காலையில கிளம்பி வந்துட்டேண்ணே .." என்றவர், சுத்தமாக பெருக்கி முடியை ஒரு பழைய நியூஸ் பேப்பரில் கட்டி எடுத்துக்கொண்டார். "சிலவங்க சங்கட படுவாங்க வெட்டின முடிய வீட்ல போட்டு போனா..அதான்"

என் மாமா கொடுத்த பணத்தைக் கும்பிட்டு வாங்கி கொண்டவரிடம் அடுத்து எப்ப வருவீங்க இந்தப்பக்கம் என்றேன். "நம்பர் நோட் பண்ணிக்கோங்க தம்பி..கூப்புடுங்க..வந்துர்றேன்..!" என்று சிரித்தார்.


Saturday, May 16, 2020

கொரோனா கோலங்கள் - முட்டை சோறு

இன்று காலை வீட்டிற்கு தேவையான சில சாமான்களை வாங்கிக்  கொண்டு ரிலையன்சிலிருந்து வெளி வந்தேன். நீளமான வரிசை வெளியில் நிற்பதைப்   பார்க்கையில் நல்ல நேரத்தில் வந்தோம் என நினைத்துக் கொண்டேன். 

வாசல் அருகிலேயே இரண்டு, மூன்று பேர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தனர். எல்லோரும் வயதானவர்கள். எல்லோர் முகத்திலும் அழுக்கேறிய 'மாஸ்க்குகள்'. போதாக்குறைக்கு கையில் வேறு ஒன்றிரண்டு வைத்திருந்தனர். யூகித்துக்கொண்டேன், கீழே கிடந்ததை எடுத்து வைத்துள்ளனர் என்று. எத்தனை பெரிய அபாயம். காசைக் கொடுத்தவாறு 'மாஸ்க்கை' ப் பற்றிக்கேட்டேன். "ஆமா, கீழதான் எடுத்தோம். சிலவங்க காரிலிருந்து கூட தூக்கி போடுவாங்க, இங்கின வர்றப்ப..பொறுக்கி வச்சுக்குவோம். அதை மூஞ்சில போடலன்ன திட்டறாங்க ..!" என்று சிரித்தார் ஒரு பெரியவர். அதை போட வேண்டாம், துண்டையோ, சேலையையோ முகத்தை போர்த்திக் கொள்ள அறிவுறுத்தினேன்.
 'மாஸ்க்' அணியும் புண்ணியவான்கள் அதை உபோயோகித்த பிறகு குப்பைத்தொட்டியில் போட்டால் புண்ணியமாய் போகும் என நினைத்துக்கொண்டேன்.

அவர்கள் அருகிலேயே ஒரு பெண்மணி , ஆறேழு வயது பையனுடன் நின்றிருந்தார். மிகவும் கூச்சமாக, "பையனுக்கு ஏதாவது சாப்பிட கொடுங்க ..பிஸ்கட், பன்னு..!" நன்றாகப்புரிந்தது அவர் பிச்சை கேட்க சங்கடப்படுகிறார் என்று. பார்க்க கிராமத்துப் பெண்மணி போலிருந்தார். அந்த பையன் என் பையையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.  
நான் அவனிடம், பேர் என்ன, ஸ்கூல் போகலையா என்றேன் வழக்கமாய் சிறுவர்களிடம் கேட்பது போல். "ஸ்கூல் லீவு ..!" என்றவாறு நான் கொடுத்த பிஸ்கட் பாக்கெட்டை வாங்கி கொண்டான். 
"ஜாலி தான..ஸ்கூல் லீவு ..!" என்று சிரித்தேன், எப்படியாவது ஒரு சிரிப்பை அவன் முகத்தில் பார்க்க வேண்டும் என்று.. 
"..இல்ல..!" என்றான் சோகமாய் முகத்தை வைத்துக்கொண்டு. 
"ஸ்கூலுக்கு போகணுமா..ஏன்?" என்றேன், ஆச்சரியம் தாளாமல். 

"ஸ்கூல்ல தான் முட்டை சோறு கொடுப்பாங்க..!" என்றான்.

இச்சிறுவனைப் போல் எத்தனை பள்ளி செல்லும் சிறுவர் சிறுமியர் அவதிப்படுவர் ? அவர்களுக்காகவாது, இந்த கொரோனா ஒரு முடிவுக்கு வரவேண்டும். தயவு செய்து பிரார்த்திக்கொள்ளுங்கள்!


Friday, May 8, 2020

கொரோனா கோலங்கள்

இந்த கொரோனா காலகட்டத்தை கொ.மு  (கொரோனாவிற்கு முன்) கொ.பி (கொரோனாவிற்கு பின்) என பிரிக்கலாம் போலிருக்கிறது.

சமீப காலமாக எங்கள் தெருவில் நிறைய வியாபாரிகள் தட்டுப்படுகின்றனர். பெரும்பாலும் புதிய முகங்கள். குறிப்பாக காய், பழம், உதிரி பூ, அப்பளம், கருவாடு என விற்போர். என் அம்மா பெரும்பாலும் வாடிக்கையாய் வரும் அவர்களை அறிந்து வைத்திருப்பார். அவரே கண்டுணர்ந்தது நிறைய புது முகங்களை. அதிலும் ஒரு சிலர் தான் தினசரி வந்தனர். பெரும்பாலும் வாரம் ஒரு முறையோ, இரு முறையோ வந்தனர். சிலருக்கெல்லாம் வியாபாரம் வரவே இல்லை. அவர்களது கையாளுதலிலேயே கண்டுணர முடிந்தது. என் அம்மா வெளிப்படையாகவே அவர்களிடம் கேட்க, அழாத குறையாக ஒப்பு கொள்வர். அவர்கள் எல்லாம் வேறு ஏதோ தொழில் புரிந்தவர்கள். எத்தனை நாள் சும்மா இருக்க முடியும். அவர்களால் முடிந்ததை வியாபாரம் செய்யத் துவங்கி விட்டனர் என்பது தெரிய வந்தது.


உதிரி பூ விற்கும் பெண்மணி ஒருவர், வீட்டு வேலை செய்பவராம். போய் வர பஸ்ஸோ, ஷேர் ஆட்டோவோ இல்லை. அதையும் மீறி நடந்தே போனவரை வேலைக்கு வரவேண்டாம் என விரட்டியே விட்டனராம். வீட்டிற்குள் விடாமல் அவர்கள் செய்தது அந்த அம்மாவிற்கு என்னவோ போலாகிவிட்டது. "எத்தனை வருஷம் வேலை பார்த்திருக்கேன். அன்னிக்கு அவ்வளவு தூரம் நடந்தே போனேன்..அதுவும் பாவம் வீட்டு வேலை செய்ய கஷ்டப்படுவாங்களே ன்னு, மனசு கேட்காம போனேன். கதவை கூட திறக்காம வெளியவ நிக்க வச்சு அனுப்பிச்சிட்டாங்க..மனசு ஆத்தாமா போகுது.." என்றவர் "ரேஷன்ல அரிசி கொடுக்கிறான்..குழம்பு காய்க்கு எங்கே போறது..அதான் உதிரி பூ வாங்கி விக்கிறேன், வேற ஏதும் தெரியாதே..பூ கட்ட தெரிஞ்சா கூட பூ தோத்து விக்கலாம்..அதுவும் தெரியாது..ரெண்டு புள்ளைக இருக்கு..முன்ன வீட்டு வேலை முடிஞ்சு போறப்ப எதோ சாப்பிட கொடுப்பாங்க..புள்ளைங்களுக்கு கொடுப்பேன்..!" என்றார்.

-----

வடகம் விற்று கொண்டு வந்தார் ஒரு பெரியவர். கூழ் வடகம், ஜவ்வரிசி வடகம், வெங்காய வடகம் என பிளாஸ்டிக் கவரில் போட்டு மெழுகு வர்த்தியால் சீல் செய்யப்பட்டிருந்தது. பார்க்கவே பாவமாக இருந்தது. டீ கடையில் வடை போடுபவராம். டீ கடைதான் இல்லையே என்ன செய்வது. அக்காவும் தம்பியுமாம். கல்யாணமும் ஆகவில்லை. காலம் உருண்டோடிப்போனது. அக்கா ஏதோ ஆபிஸில் பெருக்கி சுத்தம் செய்யும் வேலை பார்த்து வந்தாராம். இப்போது இரண்டு பேருமே பிழைப்புக்கு வழியின்றி இருக்க அக்கா வடகம் போட்டு கொடுக்க, தம்பி விற்க வருகிறார். "ரேஷன் அரிசியும், வெயிலும் கை கொடுக்க ஏதோ அரை வயிறு, கால் வயிறு ரொம்புது" என்றார்.  அவரால் கூவி கூட விற்க முடியவில்லை. ஏதோ விலாசம் கேட்பது போல் வீடு வீடாய் போய் கேட்கிறார்.

------

ட்ரை சைக்கிளில் ஒரு வயதான தம்பதி சமேதம் கீரை விற்க வந்தனர். அவர் சைக்கிளை தள்ளி கொண்டு வர, அந்த அம்மா சைக்கிளில் உட்க்கார்ந்து வந்தார். அந்த அம்மாவின் முகம் ஏதோ ஒரு வெட்கத்திலேயே இருக்கும். வாரம் இரு நாட்கள் மட்டும் தான் வந்தனர். கேட்டதற்கு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஏரியாவாக வியாபாரம் செய்கின்றனராம். அவர், ட்ரை சைக்கிளில் லோடு அடிப்பவராம். வீட்டம்மா ஸ்கூல் வாசலில் பெட்டி கடை வியாபாரமாம். "முதல்ல சங்கடப்பட்டா..ஆள் தாட்டியா இருக்கிறதுனால நடக்க முடியாதுன்னு ..நான்தான் உள்ளயே உக்காரு..நான் ஓட்டிட்டு போறேன்..நீ கீரையை கொடுத்து காச வாங்கிக்கன்னு.. என்ன.. ஒரு பசிக்கு டீ கூட குடிக்க முடியமாட்டேங்குது..முன்னெல்லாம் கட்டு கட்டா பீடி குடிப்பேன் லோடு அடிக்கிறப்ப..இப்ப ஒரு மாசமா இல்லவே இல்ல..என் வீட்டம்மா எத்தனை வாட்டி சொல்லிருக்கும் .." என்று சிரித்தார்.

-----

ஒரு பெண்மணி வாழை ஸ்பெஷலிஸ்ட். வாழைத் தண்டு, வாழைக் காய், வாழைப் பூ மட்டும் விற்பார். சிலைமான் பக்கம் ஏதோ கிராமமாம். போக்குவரத்து ஏதும் இல்லாததால், வாழைத் தோப்பெல்லாம் வீணாய் போகிறது. ஒவ்வொரு நாளும் வெட்டி எடுத்து வந்து விற்கிறார். வீட்டுக்காரர் டூ வீலரில் ரிங் ரோட்டருகில் விட்டு விடுவாராம். அதற்கு மேல் அனுமதியில்லை. போலீஸ் கெடுபிடியில் இவர் வருவதே சிரமம் என்பார். அப்படியிருந்தும் சில நாள் மனசு கேட்காமல் அவர் வண்டியில் தேடி வந்துவிடுவார். ஓரிரு சமயம், இந்த அம்மா வண்டியில் பின்னாடி கூடையுடன் உட்கார்ந்து வியாபாரம் பார்க்கும். வண்டியில் உட்கார்ந்துக் கொண்டே புருஷனும் பொண்டாட்டியும் வாழைக் காய், வாழைப் பூ என கூவி வருவர். 

பாவம், இன்றைக்கு அந்தப் பெண்மணி மட்டும் வந்தார். அழுது வீங்கியிருந்தது முகம். என் அம்மா என்னவோ ஏதோவென்று விசாரிக்க, "ஒரு மாசமா நல்லா இருந்தாம்மா, கூட மாட ஒத்தாசையா..கிரகம், நேத்து கடைய (டாஸ்மாக்) திறக்கவும் போய்ட்டாம்மா..தலையெழுத்து..!" என்று தலையில் அடித்துக் கொண்டார்.


Thursday, April 2, 2020

வாழ்வின் விளிம்பில்..!

சாவதை விட வாழ்வதுதான் இங்கு பரிதாபமாக உள்ளது..!

கொரோனா ..கோராத்தாண்டவமாடுகிறது எங்கு நோக்கினும்.

எதேச்சேயாக பெங்களூரிலிருந்து அம்மாவை பார்க்க மதுரை வர, மறு நாள் ஊரடங்கு.அதைத்  தொடர்ந்து அனைத்து போக்குவரத்தும் முடங்க மதுரையே கதியாகிப்போனது.

ஊரடங்கின் இரண்டாம் நாளே மக்கள் விதியை  காற்றில் பறக்க விட காவல் துறையினர் ஆங்காங்கே சாலையில் திரிவோரிடம் கடுமையாய் நடக்க ஆரம்பித்தனர். பாதிப்பை உணராத மக்கள் ஒரு புறம் டூ வீலரில் சுற்ற, அவர்களால் அத்தியாவசிய தேவைகளுக்கு போய் வருவோர் பெரும் இன்னலுக்கு உள்ளானர். இதில் குறிப்பாய் பாதிப்படைந்தோர் அன்றாட வியாபாரிகள் தான்.


காய், பழம், பொரி கடலை, நொறுக்கு தீனி, ஊறுகாய், பினாயில், கோலப்பொடி, அப்பளம் விற்போர், பழைய பேப்பர் வாங்குவோர் என எண்ணற்றோர் ஒருபுறம். சில தெருக்களில் (சில வீடுகளுக்கென) தினசரி பிச்சை எடுப்போர் என உண்டு. இன்னும் சொல்லப்போனால், எங்கள் பக்கத்து வீட்டிற்கென ஒரு சில நாய்கள், பூனை வருவதுண்டு.

ஒட்டு மொத்தமாய் ஒருவரையும் காணோம். இப்படியொரு முடக்கத்தை வாழ்வில் கண்டதில்லை. உலகமும் கண்டிராது.

நான்கு நாட்கள்தான், தெருவில் கோலப்பொடி விற்கும் பெண்ணின் குரல் கேட்க ஆரம்பித்தது. எலி வளையிலிருந்து எட்டிப்பார்ப்பது போல் ஒவ்வொரு தலையாய் ஒவ்வொரு வீட்டிலிருந்து தென் பட ஆரம்பித்தது. எங்கள் வீட்டிற்கு வந்த பெண்ணிடம் என் அம்மா நலம் விசாரிக்க ஆரம்பித்தார். அப்பெண் அழாத குறையாய் கொட்டி தீர்த்தார். வீட்டில் பிள்ளைகள் பசியோடிருப்பதாகவும், பதினோரு கி.மீ நடந்தே வருவதாகவும் சொன்னார். தேவைக்கு அதிகமாகவே வாங்கிய என் அம்மா ஒரு நூறு ரூபாய் வைத்துக்கொள்ளவும் கொடுத்தார்கள். வாங்க மறுத்த அவரிடம், "சரி, பார்த்து போ..எங்கே பார்த்தாலும் கோரனோ , கோரனோ ன்னு சொல்றாங்க..கவனமா இரு. வீட்டிலேயே இருக்க பாரு " என்றார் என் அம்மா.

"அட போங்கம்மா..செத்தா சாவுறோம்..செத்துரக்கூடாதுன்னுதான் வாழறோம்..இப்ப  சாவுறது கூட பெரிசா தெரியல...வாழ்றது தான் மா கஷ்டமா இருக்கு ..!" என்றபடி கோலப்பொடி என கூவிக்கொண்டே நடக்க ஆரம்பித்தார்.

Friday, February 21, 2020

பெண் நடத்துனர்

தினமும் செல்லும் அதே பேருந்துதான் . ஆனால், ஓட்டுனரும், நடத்துனரும் புதிதாயிருந்தனர். அதிலும், பெண் நடத்துனர்.வழக்கமான பயணிகள் கூட்டம் மற்றும் புதிதாய் பயணிப்போர் என கூட்டம் நிரம்பி வழிந்தது. பேருந்து சற்று மெதுவாய்த்தான் போனது. ஓட்டுநருக்கு வழித்தடம் புதியது மட்டுமல்ல, வயதும் அதிகமாயிருந்தது. வழக்கமான நடத்துனர் எனில் யார் பாஸ் வைத்திருப்போர் எனத்தெரியும். புதிய பயணிகளிடம் மட்டும் டிக்கெட் வழங்கிவிட்டு, ஸ்டேஜில் தாமதிக்காமல் பேருந்து நேரத்திற்கு செல்ல உதவுவார். ஏனெனில், காலை 6.45 மணிக்கு டிப்போவில்  கிளம்பி சார்ஜாபூர் அடைய 8.15, 8.30 ஆகிவிடும். பெங்களூரைப் பொறுத்தவரை தூரத்தை விட , போக்குவரத்து நெரிசலே நாம் செல்லும் நேரத்தை தீர்மானிக்கும்.

புதிய நடத்துனர் பெண்மணி ரொம்பவும் திணறித்தான் போனார். ஸ்டேஜில் நின்று போக, போக தாமதமாகிக் கொண்டே போனது. அதுவும் வார முதல் நாள், திங்கள் கிழமை வேறு. வெளியே போக்குவரத்து நெரிசல், உள்ளே வேலைக்கு செல்வோரின் எரிச்சல், முனகல். என்னைப் போல் சிலர் நடத்துனர் பெண்மணியை பரிதாபமாகப் பார்த்தோம். அவர் முகத்தில் ஓர் இனம் புரியாத உணர்ச்சி தெரிந்தது. கவலையா, குழப்பமா இல்லை வலியா என்று கண்டுணர முடியவில்லை.

தொம்மசந்திரா நிறுத்தம் வருவதற்கே மணி எட்டாகிப்போனது. ஏழே முக்காலுக்கு தாண்டியிருக்க வேண்டியது. புலம்பித்தள்ளிவிட்டனர்.  நல்ல வேளையாக அதற்குள் முக்கால்வாசி கூட்டம் இறங்கியிருந்தது. பேருந்து நிறுத்தத்தை விட்டு சற்று தொலைவில், ஆனால் வழியில் ஒரு பொது கழிப்பறை உண்டு. நடத்துனர் பெண்மணி, ஓட்டுநரிடம் நிறுத்த சொல்லி வேகமாய் இறங்கிப்போனார். அவ்வளவுதான், உள்ளே இருந்த கூட்டம் கன்னடம், தமிழ், ஹிந்தி என ஓட்டுநரிடம் கத்த ஆரம்பித்தது. ஓட்டுநருக்கோ சங்கடமாகிப் போனது. ஐந்து நிமிடம் ஆகியிருக்கும். வந்துவிட்டார் அந்த நடத்துநர் பெண்மணி. வந்தவரிடம், மீண்டும் கத்த ஆரம்பித்தனர் பயணியர் கூட்டம். அதிலும், குறிப்பாய் பெண்கள் கூட்டம். எனக்கு ஆச்சர்யமாகிப் போனது. ஒரு பெண்மணி கன்னடத்தில் ஏதோ சொன்னது எனக்குப் புரியவில்லை. ஆனால், ஓட்டுநர் கோபமாக பதிலுக்கு "நீயெல்லாம் ஒரு பொம்பளையா" என திட்டியது மட்டும் புரிந்தது.

ஆனால், நடத்துநர் பெண்மணி உட்கார்ந்தவர், உட்கார்ந்தவர் தான்.அவர் இருக்கையை விட்டு எழவே இல்லை. இருவர் அடுத்த நிறுத்தத்தில் ஏறி பயண சீட்டு கத்தி கேட்டும் அவர் வரவே இல்லை. அவர்களும் இறங்கி போக இப்போது நான் உட்பட மூவர் மட்டுமே இருந்தோம். எங்கள் நிறுத்தமும் வந்தது. சொல்லியது போல் நாங்கள் மூவரும் ஓட்டுநர் அருகே போய்  நின்றோம், முன் வழியே இறங்குவதற்கு. அப்போதுதான் பார்த்தேன். நடத்துநர் பெண்மணி தலை குனிந்தவாறு உட்கார்ந்திருந்தார்.

ஓட்டுநர் எங்களிடம் கன்னடத்தில், "நேரமாயிருச்சா..இன்னைக்கு? ரொம்ப சங்கடமாயிருக்கு!" என்றார் கவலையுடன். எங்களில் இருந்த ஒரு முதியவர், "இல்லைப்பா, நேரமெல்லாம் நிறையவே இருக்கு எங்களுக்கு..என்னா?!" என்றார் என்னையும், இன்னொரு நபரையும் பார்த்து. ஆமாம் என்றோம் ஒருமித்து.  (ஆவுது, ஆவுது என்றோம் கன்னடத்தில்)

இறங்கிய எங்கள் மூவரையும் பார்த்து ஓட்டுநர் வணக்கம் வைத்தார்.ஆனால், நாங்கள் மூவரும் நடத்துநரைத்தான் கவலையுடன் பார்த்தோம். நிமிர்ந்த நடத்துநர் பெண்மணி எங்களைப் பார்த்து புன்னகைத்தார். எங்கள் மூவருக்கும் அதில் அப்படியொரு ஆனந்தம். 

வழக்கத்திற்கு மாறாய், அன்றைய பொழுது மெதுவாய் நகர்ந்தது.