Wednesday, October 7, 2020

சத்தமில்லாமல் ஓர் யுத்தம்..!

சமீப காலமாகத்தான் ஒன்றை உணர்கிறேன். இந்த ஸ்மார்ட் போன் வந்தபின், (வாட்ஸ அப் பும் ஒட்டிப்பிறந்த இரட்டையராய் வந்துவிடுகிறது) அதீதமான மதம் சாதி சார்ந்த பதிவுகள், கருத்துக்கள் அதிலும் 'மீம்' எனும் பெயரில் நம்மிடம் வந்துகொண்டே இருக்கின்றன. நாம் விரும்புகிறோமோ, இல்லையோ அவைகள் நம் கவனத்தில் இடம் பெறுகின்றன. எப்படியும் அழிக்கத்தான் போகிறோம், இருந்தாலும் நம் பார்வையில் தொடர்ந்து நாளாக, நாளாக ஆக்கிரமிக்க ஆரம்பிக்கின்றன. இது மறுக்க முடியாத உண்மை.

என் பள்ளிப்பருவத்தில் யாரும், யாரையும் மதம், சாதி நோக்கில் அறிந்தது இல்லை, பழகியதும் இல்லை. அதை ஒரு பொருட்டாகக்கூட எண்ணியதில்லை. இன்னும் சொல்லப்போனால், பிறமதத்தை உயர்வாக எண்ணினோம். அடுத்த மதப்பண்டிகையை உற்சாகமாய் கொண்டாடினோம். அப்துல்லா, நாசர், சலீம், முகம்மது கனியாயிருக்கட்டும், டேவிட், அந்தோணி, வெஸ்லியாயிருக்கட்டும். யாராயிருந்தாலும், பள்ளி, கல்லூரி நாட்களிலிருந்து நட்பென்பது இன்னும் தொடர்ந்து கொண்டேதானிருக்கிறது. ஆனால், இப்போது சமீப காலமாய் ஏதோ ஒரு திரை எங்களுக்குள் இருப்பது போல உணர்கிறேன். முன்பிருந்த அந்த அன்னியோன்யம் இல்லாமலிருப்பதை உணர முடிகின்றது. நகைச்சுவை எனும் பெயரில் ஏதாவது 'மீம்' ஒன்றை (மதம், கட்சி சார்ந்த) யாரவது பகிர அதற்கு எந்தவிதமான சலனமுமின்றி ஒரு நிசப்தம் நிலவுவதை நன்றாகவே உணரமுடிகின்றது.

பிறந்து இத்தனை வருடங்களில், நமக்கு நாம் யார் என்பதை, பகிரும் 'மீம்' கள்தான் அடையாளம் காட்டுகின்றன. "நீ இந்து இல்லை, தமிழன்.. நாம் திராவிடர்கள்..அவர்கள் ஆரியர்கள்..சங்கீஸ்..மங்கீஸ்.." என ஏதெதோ பிதற்றுதலை சகிக்கமுடியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் உண்மை. இத்தகைய பதிவுகள், அது நகைச்சுவையோ, தகவலோ அது நம்மையறியாமல் உள்ளே சென்று உட்கார்ந்துக்கொள்கிறது. 'தேவைப்படும்போது' நம்மை மத, சாதி, கட்சி, இன ரீதியாகப் பிரிக்கத்தூண்டுகிறது. அதுவும், இப்போதுள்ள இளைய சமுதாயத்திடையே இது நன்றாய் வேரூன்ற ஆரம்பித்துவிட்டது.  இது நிதர்சனம்!

தேவர்மகனில் கமல் குறிப்பிட்டதுப்போல, நம் எல்லோருக்குள்ளும் அந்த மிருகம் தூங்கிக்கொண்டுதானிருக்கிறது. இத்தகைய இரைகள் அதை எழுப்பிவிடுகின்றன. 


No comments: