வாசல் அருகிலேயே இரண்டு, மூன்று பேர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தனர். எல்லோரும் வயதானவர்கள். எல்லோர் முகத்திலும் அழுக்கேறிய 'மாஸ்க்குகள்'. போதாக்குறைக்கு கையில் வேறு ஒன்றிரண்டு வைத்திருந்தனர். யூகித்துக்கொண்டேன், கீழே கிடந்ததை எடுத்து வைத்துள்ளனர் என்று. எத்தனை பெரிய அபாயம். காசைக் கொடுத்தவாறு 'மாஸ்க்கை' ப் பற்றிக்கேட்டேன். "ஆமா, கீழதான் எடுத்தோம். சிலவங்க காரிலிருந்து கூட தூக்கி போடுவாங்க, இங்கின வர்றப்ப..பொறுக்கி வச்சுக்குவோம். அதை மூஞ்சில போடலன்ன திட்டறாங்க ..!" என்று சிரித்தார் ஒரு பெரியவர். அதை போட வேண்டாம், துண்டையோ, சேலையையோ முகத்தை போர்த்திக் கொள்ள அறிவுறுத்தினேன்.
'மாஸ்க்' அணியும் புண்ணியவான்கள் அதை உபோயோகித்த பிறகு குப்பைத்தொட்டியில் போட்டால் புண்ணியமாய் போகும் என நினைத்துக்கொண்டேன்.
அவர்கள் அருகிலேயே ஒரு பெண்மணி , ஆறேழு வயது பையனுடன் நின்றிருந்தார். மிகவும் கூச்சமாக, "பையனுக்கு ஏதாவது சாப்பிட கொடுங்க ..பிஸ்கட், பன்னு..!" நன்றாகப்புரிந்தது அவர் பிச்சை கேட்க சங்கடப்படுகிறார் என்று. பார்க்க கிராமத்துப் பெண்மணி போலிருந்தார். அந்த பையன் என் பையையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.
நான் அவனிடம், பேர் என்ன, ஸ்கூல் போகலையா என்றேன் வழக்கமாய் சிறுவர்களிடம் கேட்பது போல். "ஸ்கூல் லீவு ..!" என்றவாறு நான் கொடுத்த பிஸ்கட் பாக்கெட்டை வாங்கி கொண்டான்.
"ஜாலி தான..ஸ்கூல் லீவு ..!" என்று சிரித்தேன், எப்படியாவது ஒரு சிரிப்பை அவன் முகத்தில் பார்க்க வேண்டும் என்று..
"..இல்ல..!" என்றான் சோகமாய் முகத்தை வைத்துக்கொண்டு.
"ஸ்கூலுக்கு போகணுமா..ஏன்?" என்றேன், ஆச்சரியம் தாளாமல்.
"ஸ்கூல்ல தான் முட்டை சோறு கொடுப்பாங்க..!" என்றான்.
இச்சிறுவனைப் போல் எத்தனை பள்ளி செல்லும் சிறுவர் சிறுமியர் அவதிப்படுவர் ? அவர்களுக்காகவாது, இந்த கொரோனா ஒரு முடிவுக்கு வரவேண்டும். தயவு செய்து பிரார்த்திக்கொள்ளுங்கள்!
No comments:
Post a Comment