Monday, May 25, 2020

கொரோனா கோலங்கள் - உதவி

ஊரடங்கைத் தளர்த்தி ஓலா சேவைத் தொடங்கியவுடன், என் மனைவிக்கு அப்படியொரு திருப்தி. அவர் பெரும்பாலும், ஓலா ஆட்டோவினையே தெரிவு செய்வார் அவரது பயணங்களுக்கு. சிக்கனம் ஒரு புறம் இருந்தாலும், பாதுகாப்பு கருதியே அவர் இச்சேவையை தேர்ந்தெடுப்பார். பையனை டியூஷன் அனுப்பவதாகட்டும், மார்க்கெட் போவதாய் இருக்கட்டும். அதிலும், அவருக்கு வெளியூர் தனியே செல்கையில் மிக கைகொடுக்கும் என்பார். 

கடந்த இரண்டு மாதங்களாக எங்குமே செல்லவில்லை. ஓரிரு நல்லது, கெட்டது பார்க்க, விசாரிக்க வேண்டியிருந்தது. போதாக்குறைக்கு, என் பையன் இந்த ஊரடங்கில் மேலும் வளர்ந்திருந்தான். அவனுக்குத் தேவையான 'அவசிய' உடுப்புகள் வாங்க வேண்டியிருந்தது. இந்த சனி, ஞாயிறுகளில் பத்து பனிரெண்டு முறை பயணித்திருப்பார் என் மனைவி. ஒரே ஒரு நபர் மட்டும்தான் ஆட்டோவில் அனுமதி என்பதால், பெரும்பாலும் அவர் மட்டுமே தனித்தே பயணித்தார். எனக்கும் அலுவலிருந்தது. சில இடங்களுக்கு நானும் அவரும் பயணிக்க வேண்டியிருந்ததால், ஓலா கேப்பில் (இருவர் மட்டுமே அனுமதி) சென்றோம். 

காரில் ஏறி உட்கார்ந்து சில நிமிடங்களிலேயே என் மனைவி, டிரைவருடன் பேச்சு கொடுக்க ஆரம்பித்தார். பொதுப்பேச்சு தான், கொரனோவைப்பற்றி. அவ்வளவுதான்..எல்லா டிரைவர்களும் சொல்லிவைத்தார் போல் புலம்பித் தள்ள ஆரம்பித்தனர், ஒவ்வொரு பயணத்தின்போதும். "வண்டி டியூ கட்ட முடியல, வீட்டு வாடகை, சுகர் பீபி மாத்திரை செலவு, புள்ளைக படிப்பு செலவு" ..என பட்டியலிட்டு பேசுவர்.  என் மனைவியும் கவனமாக கேட்டு பொதுவான ஆறுதல் வார்த்தை கூறுவார். நான் அவ்வளவாக பேசுவதும் இல்லை, அதிலும், பயணத்தில் தவிர்ப்பேன். அது, எனது சுபாவமாகிப்போனது. 

இறங்கும்போது ஒவ்வொரு முறையும் அவராகவே "நானே கொடுத்துக்கிறேன்..என்கிட்டே சில்லறையாவே இருக்கு" என்பார். நான் கூட சொன்னேன், "பேசாம ஓலா மணியில் பே பண்ணிடு, எதுக்கு பணத்தைத் தொட்டு ரிஸ்க் இந்த கொரோனா சமயத்தில.."

"நீங்க ஓலா மணிலா பே பண்ணி அவங்க அக்கவுண்டுக்கு போய் அதை எடுக்க ஏ டி எம் போய்..ஏ டி எம் ஒர்க் ஆவணும், அப்புறம் அதுல தேவையான நோட்டு கிடைக்கணும்..இம்சைங்க..அதுக்கு கையில கொடுத்துட்டு போனா.எவ்வளவு ஈஸி.." என நியாயப்படுத்தினார்.

இரண்டு முறை என்னிடமே பணம் கேட்டு வாங்கி கொடுத்தார். என் போனுக்கு வரும் தகவல் தொகையை விட அதிகமாகவே வாங்கி கொடுத்ததை கவனித்து கேட்டேன். "ஏய், என்ன அமௌன்ட் சொல்றாங்க..என்கிட்ட கேட்டுட்டு கொடு, மீதி கொடுக்கிறமாதிரியும் தெரியல.."

"..அவங்க கரெக்ட் ட்டா தான் சொல்றாங்க..நான்தான் கூட கொடுத்தேன்." என்றார்.

"அதுக்காக நூறு ரூபாய் வரை ஜாஸ்தி கொடுப்பியா..118 ரூ பில்லுக்கு 200 ரூ கொடுக்கிற..இப்படித்தான் எல்லார்கிட்டயும் கொடுத்தியா .." என்றேன். என்னை அறியாமல் குரல் உயர்ந்திருந்தது.

"அட, இந்தமாதிரி கண்ணுக்குத் தெரிஞ்சு கஷ்டப்படுறவங்களுக்கு கொடுத்துட்டு போங்களேன்..அத விட்டு, அந்த நிவாரண நிதி, இந்த நிவாரண நிதின்னு ஆன்லைன் ல எவ்வளவோ பே பண்ணுறீங்க..அது தேவை படுறவங்களுக்கு கிடைக்குதோ இல்லியோ.. இப்படி கஷ்டப்படறவங்ககிட்ட நாம பேசுறப்ப அவங்களுக்கு ஒரு ஆறுதலாவும் இருக்கும்..ஏதோ நம்மால முடிஞ்ச எக்ஸ்ட்ரா அமௌன்ட் கொடுக்கிறப்ப அவங்களுக்கும் எதோ ஒரு உதவியாயும் இருக்கும்.." என்று சாதாரணமாக சொன்னார்.

No comments: